காஞ்சிபுரம் ,ஜூன் 19 : காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ,கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குடும்பஸ்தர் ஒருவரை மாகரல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை சாதகமாக்கிக்கொண்டு இந்த துயரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ,வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட அங்கம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் ,85 சதவீத உடல் மற்றும் மாற்றுத்திறனைக் கொண்ட இளம்பெண் ஒருவர் உள்ளார். எழுந்து நடமாட முடியாத சூழலில் இருக்கும் அந்தப் பெண்ணால் ,வாய் பேசவும் இயலாது என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்ததாகத் தெரிகிறது. இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ,அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவருக்குப் பாலியல் ரீதியாகக் கடுமையான தொல்லைகளை அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் வாய் பேச முடியாதவர் என்பதாலும் ,உடல்ரீதியாக உடனடியாகப் போராட முடியாத நிலையில் இருந்ததாலும் ,அவரால் அந்த இடத்திலேயே உரிய முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைக்கவோ முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாகப் பாலகிருஷ்ணன் தனது அத்துமீறலைத் தொடர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ,வேலைக்குச் சென்றிருந்த அந்தப் பெண்ணின் தாய் ,தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் மாலையில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி பெண் ,தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் சைகைகள் மற்றும் தவிப்புகள் மூலமாகத் தனது குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ,உடனடியாகத் தமிழக அரசின் அவசரக் காவல் உதவி எண்ணான 100-ஐத் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்துப் புகார் அளித்தனர்.
தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே மாகரல் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் அங்கம்பாக்கம் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் ,அவரது குடும்பத்தினரிடமும் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட போலீசார் ,சம்பவ இடத்திலேயே தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையின் அடிப்படையில் ,அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்தான் இந்த அத்துமீறலில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்த காவல்துறையினர் ,அவரை உடனே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் குறித்துப் போலீசார் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலகிருஷ்ணன் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒரு கஞ்சா வியாபாரி என்பதும் ,அவர் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் ,கஞ்சா வழக்குகளின் தொடர்ச்சியாக அவரது வங்கிச் கணக்குகளைக் காவல்துறையினர் ஏற்கனவே முடக்கி வைத்துள்ளனர் என்பதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகளும் ,நான்கு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வழக்கில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகப் பாலகிருஷ்ணன் மீது மூன்று கடுமையான பிரிவுகளின் கீழ் மாகரல் போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்து ,அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அங்கம்பாக்கம் கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கஞ்சா வழக்குகளில் சிக்கி ,சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாகத் திரிந்து வந்த பாலகிருஷ்ணன் ,தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணைக் குறிவைத்து இத்தகைய அசிங்கமான செயலில் ஈடுபட்டுள்ளதால் ,அவருக்கு நீதிமன்றத்தின் மூலம் மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமப்புறங்களில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.





