நெல்லை , ஜூன் 9 : நெல்லை புதிய பேருந்து நிலையப் பகுதியில் திங்கட்கிழமை மாலை வட்டாரப் போக்குவரத்து துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், அனுமதி பெற்ற வழித்தடங்களை மீறி இயக்கப்பட்ட 11 மினி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இன்றி பேருந்துகளை இயக்கியது மற்றும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறிய இந்த பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய அல்லது அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்து வசதிகள் இல்லாத கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தின் உட்பகுதிகளை இணைக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான மினி பேருந்துகளுக்கு போக்குவரத்துத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இந்த மினி பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் செல்லாமல் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் பிரதான சாலைகளிலேயே இயக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும், பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
Also : கவின் ஆணவக்கொலை வழக்கு: தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு
நெல்லை: அடிக்கடி செல்போன் பயன்படுத்திய அக்காவை வெட்டிப் படுகொலை செய்த தம்பி!!
இந்தப் புகார்களின் அடிப்படையில் திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) செல்வி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மப்பிரியா மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திங்கட்கிழமை மாலை நெல்லை புதிய பேருந்து நிலையப் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி பேருந்துகளை நிறுத்தி அவற்றின் அனுமதி சீட்டு (Permit) மற்றும் வழித்தட விவரங்களை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது பல மினி பேருந்துகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கிராமப்புற வழித்தடங்களைப் புறக்கணித்துவிட்டு வருவாய் அதிகம் உள்ள பிரதான வழித்தடங்களில் சட்டவிரோதமாக இயக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் உரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் (Licence) இல்லாததும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து பயணிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட மினி பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதும் தெரியவந்தது.
அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையைக் கண்ட சில மினி பேருந்து ஓட்டுநர்கள் பதற்றமடைந்தனர். சோதனையின் முடிவில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 11 மினி பேருந்துகளை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட மினி பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்துத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், விதிமுறைகளை மீறியும் செயல்பட்ட இந்த மினி பேருந்துகளின் இயக்க உரிமத்தை (Permit) நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வி முறைப்படி பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மினி பேருந்து உரிமையாளர்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் விரைவில் உரிய இறுதி நடவடிக்கை எடுப்பார் என்று வட்டாரப் போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் நெல்லை பகுதியில் மினி பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








