நெல்லை, ஜூன் 1: காலாவதியான நெய் கேக்கை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நெல்லையின் பிரபல பேக்கரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அம்மு என்ற வைஷ்ணவி தேவி, தற்போது நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று, நெல்லை ரஹ்மத் நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகமான ‘ஆர்யாஸ்’ பேக்கரிக்குச் சென்றுள்ளார். அங்கு தனக்குத் தேவையான சில உணவுப் பொருட்களை வாங்கியுள்ளார். கோதுமை பிரட் மற்றும் சோமாஸ் ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு நெய் கேக்கையும் அவர் தேர்வு செய்தார். இதற்கான தொகையான 120 ரூபாயை ஜிபே (GPay) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளம் மூலமாக பேக்கரி நிர்வாகத்திற்குச் செலுத்தியுள்ளார்.
பேக்கரியில் வாங்கிய உணவுப் பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் சென்ற வைஷ்ணவி தேவி, மறுநாள் காலையில் அந்த நெய் கேக் கவரைப் பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நெய் கேக் முற்றிலும் பூஞ்சை பிடித்து, உண்ண முடியாத அளவிற்கு மிக மோசமாகக் கெட்டுப் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த கேக் பாக்கெட்டின் மேல் அச்சிடப்பட்டிருந்த விபரங்களைக் கூர்ந்து கவனித்தார். அதில், அந்த உணவுப் பொருள் ஜூலை 8ஆம் தேதியுடனேயே காலாவதியாகிவிட்டது (Expiry Date) என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, கேக் காலாவதியாகி இரண்டு நாட்கள் கடந்த பின்னரும், அதனைப் பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் பேக்கரி நிர்வாகம் தன்னிடம் விற்பனை செய்து ஏமாற்றியதை வைஷ்ணவி தேவி உணர்ந்தார். காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக முடியும் என்பதை உணர்ந்த அவர், இந்த நுகர்வோர் துரோகத்தை அப்படியே விட்டுவிடக் கூடாது என முடிவு செய்தார்.
Also read : நீட் மறுதேர்வு கணினி வழியில் நடத்த கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி
இதனைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வைஷ்ணவி தேவி முறைப்படி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “காலாவதியான கேக் என்பதைத் தெரிந்தே பேக்கரி நிர்வாகம் எனக்கு விற்பனை செய்துள்ளது. இதனால் எனக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே, எனக்குப் புதிய கேக் வழங்கிட உத்தரவிட வேண்டும். மேலும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாய் பேக்கரி நிர்வாகம் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கானது நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர் விசாரணைக்கு வந்தது. நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் மற்றும் நீதிமன்ற உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விரிவாக விசாரித்தது. வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சமர்ப்பித்த ஜிபே பணப்பரிவர்த்தனை ஆதாரம் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருந்த கேக் கவரின் விபரங்கள் ஆகியவை நீதிமன்றத்தில் முக்கிய சான்றுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளர்களுக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்க வேண்டியது ஒரு வணிக நிறுவனத்தின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டியது. காலாவதியான உணவுப் பொருளை விற்பனை செய்தது பேக்கரி நிர்வாகத்தின் சேவை குறைபாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
வழக்கின் இறுதித் தீர்ப்பு குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “பாதிக்கப்பட்ட பெண் வாடிக்கையாளருக்குப் பேக்கரி நிர்வாகம் முறையற்ற சேவையால் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இழப்பீடாக 15 ஆயிரம் ரூபாயும், இந்த வழக்கிற்காக அவர் மேற்கொண்ட செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 25 ஆயிரம் ரூபாயைப் பேக்கரி நிர்வாகம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.
இந்த மொத்த தொகையையும் தீர்ப்பு வெளியான ஒரு மாத காலத்திற்குள் பேக்கரி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை இந்த உத்தரவாத காலத்திற்குள் தொகையைச் செலுத்தத் தவறினால், குறிப்பிட்ட அந்தத் தொகைக்கு ஒன்பது சதவீத (9%) வட்டியுடன் சேர்த்து முழுத் தொகையையும் வழங்க வேண்டியதிருக்கும்” என்று அந்தத் தீர்ப்பில் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் வணிக நிறுவனங்களுக்குப் பாடமாக அமைந்துள்ள இந்த தீர்ப்பு, நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் காலாவதி தேதியைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம்













