
Chennai, May 15: விஜயின் முதல் வார ஆட்சி : தமிழக முதலமைச்சராக பதவியேற்ற முதல் வாரத்திலேயே 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் போன்ற அதிரடி நடவடிக்கைகளால் கவனம் ஈர்த்த விஜய், அதே நேரத்தில் அதிமுக கிளர்ச்சி எம்எல்ஏக்கள் ஆதரவு மற்றும் அரசியல் சர்ச்சைகளால் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளார்.
“மாற்றத்திற்கான வாக்கு” என்ற பெரிய எதிர்பார்ப்புடன் தமிழக அரசியலுக்குள் முழுமையாக நுழைந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் புதிய முதலமைச்சர் விஜயின் முதல் வார ஆட்சி தற்போது மாநில அரசியலின் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பழைய அரசியல் முறைகளை கடுமையாக விமர்சித்த அவர், ஆட்சியின் முதல் சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், அதே நேரத்தில் அரசியல் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே விஜய் அரசு அறிவித்த முக்கிய திட்டங்களில் அதிகம் பேசப்பட்டது இலவச மின்சார திட்டம். இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம், ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் அமலில் இருந்த 100 யூனிட் இலவச மின்சார திட்டமும் தொடரும் என அறிவிக்கப்பட்டதால், புதிய திட்டத்தால் பழைய பயனாளிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை உருவானது.
இதனுடன் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக 2026 ஜனவரி 1 முதல் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த DA hike அரசின் ஆரம்பகட்ட நிதி அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக “சிங்கப்பெண் Special Task Force” என்ற பெயரில் ஐஜி தலைமையிலான சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க தனி உயர் மட்ட போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது, சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தில் விஜய் அரசு தீவிரமாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் Anti-Narcotic Task Force விரிவுபடுத்தப்பட்டு 65 புதிய நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் நேரடி கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால், இது சமூக ரீதியாக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், சமூக நலத்திட்டங்களில் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில், மே 2026 மாதத்திற்கான “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இந்த திட்டம் TVK ஆட்சியிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டது அரசியல் ரீதியாக முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. இதனுடன், சுமார் 10 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் மாற்றம் ஏற்பட்டாலும், welfare continuity தொடரும் என்ற அரசியல் சிக்னலை விஜய் அரசு அனுப்பியுள்ளது.
இதற்கிடையில்,NEET தேர்வு விவகாரத்திலும் விஜய் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் NEET அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்து, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இருந்து வரும் NEET எதிர்ப்பு அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கிறார் என்ற பார்வையும் இதன் மூலம் உருவாகியுள்ளது.
ஆனால், விஜயின் முதல் வார ஆட்சியில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது TASMAC மற்றும் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான அரசியல் நிகழ்வுகள்தான்.
பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இயங்கும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்தது. தற்போதைய விதிகளில் 50 முதல் 100 மீட்டர் வரை மட்டுமே தூர கட்டுப்பாடு இருந்த நிலையில், அதை 500 மீட்டராக உயர்த்தியிருப்பது சமூக மற்றும் அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் நடந்த சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு 144 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றது. ஆனால் அந்த ஆதரவுகளில் 25 அதிமுக கிளர்ச்சி எம்எல்ஏக்களின் வாக்குகளும் இடம்பெற்றிருந்தது அரசியல் விவாதத்தை கிளப்பியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரடியாக சந்திக்காமல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட கிளர்ச்சி அணியை விஜய் சந்தித்தது எதிர்க்கட்சிகளுக்கு விமர்சன ஆயுதமாக மாறியது.
குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி மீது DVAC ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது Gutkha scam தொடர்பாக CBI சோதனைகள் மற்றும் chargesheet நடவடிக்கைகள் நடந்துள்ளன. வருமான வரித்துறை மற்றும் Enforcement Directorate விசாரணைகளும் அவரை சுற்றி நடைபெற்றுள்ளன. இருப்பினும், இந்த வழக்குகளில் இறுதி தீர்ப்பு இன்னும் வராததால், சட்ட ரீதியாக அவர்கள் குற்றம் நிரூபிக்கப்படாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் “ஊழல் அரசியலை எதிர்க்கிறேன்” என்று தேர்தல் மேடைகளில் பேசிய விஜய், தற்போது சர்ச்சை முகங்களுடன் அரசியல் ஒத்துழைப்பில் ஈடுபடுகிறாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது. தேர்தல் காலத்தில் DMK கூட்டணியை “cash chest alliance” என விமர்சித்த விஜய், தற்போது அதே அரசியல் நடைமுறைகளை பின்பற்றுகிறாரா என்ற விமர்சனங்களும் எழுகின்றன.
இதற்கிடையில், “என் அரசில் multiple power centres இருக்காது” என்று அறிவித்த பின்னர், தனது தனிப்பட்ட ஜோதிடரையும் TVK பேச்சாளருமான ஒருவரை Chief Minister’s Officer on Special Duty (Political) ஆக நியமித்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
மேலும், ஆட்சி அமைக்கும் உரிமை கோரி ஆளுநரை சந்திக்கச் சென்றபோது, எந்த அதிகாரப்பூர்வ கட்சி பதவியும் இல்லாத தனது நண்பர்களான தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணனை உடன் அழைத்துச் சென்றதும் அரசியல் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியது.
மக்கள் நல அறிவிப்புகள், welfare continuity, NEET எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, TASMAC கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் மூலம் நிர்வாகத்தில் அதிரடி காட்டும் விஜய், அதே நேரத்தில் அரசியல் survival-க்காக பழைய power politics-ஐ பயன்படுத்துகிறாரா என்ற கேள்வியும் தமிழக அரசியலில் உருவாகியுள்ளது.












