நெல்லை ஆசிரியர் இடமாறுதல் விவகாரம்: 11 அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை

image 476

நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக இந்த முறைகேட்டில் தொடர்புடைய 11 கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2009 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல்களில் அரசாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது.

Also Read : நெல்லையில் “ஆபரேஷன் SHIELDNET” மூன்றாம் நாளாக தீவிர கண்காணிப்பு : ரவுடிகள் வேட்டை தீவிரம்

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் முறைப்படி புகார் அளித்த புகார்தாரர் தரப்பில் கூறுகையில்,

“குறிப்பிட்ட அந்த ஆறு ஆண்டு காலத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதலில் எவ்வித விதிகளும் பின்பற்றப்படவில்லை. தங்களுக்குச் சாதகமான இடங்களைப் பெறுவதற்காக, பெரும் தொகையைக் லஞ்சமாகக் கொடுத்து இடமாறுதல்கள் பெறப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனது புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான முதற்கட்ட விசாரணை நடத்தி முறைகேட்டில் நேரடியாகத் தொடர்புடைய 11 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தற்போது முதற்கட்டத் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்” என்றார்.

இந்த விவகாரம் குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்துகுமார், கல்வித்துறையில் நிலவும் இந்த அவலநிலை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் என்பது ஒரு தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இது தங்களது கடமையை நேர்மையாகச் செய்ய நினைக்கும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். கடந்த கால ஆட்சிக் காலங்களிலும் கூட தங்களுக்கு விருப்பமான ஊர்களுக்குப் பணி மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களிடம் இடைத்தரகர்கள் மூலம் ரூ.10 லட்சம் வரை லஞ்சமாக வசூலிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. இந்த லஞ்சப் பெருச்சாளிகளின் முறைகேடுகள் உடனடியாக முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். வரக்கூடிய புதிய ஆட்சிக் காலத்திலாவது இதுபோன்ற அநீதிகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போது, திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) முன்னிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அதிரடிச் சோதனைகளையும், விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2009 முதல் 2015 வரை வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவுகள் அதற்குப் பயன்படுத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல்கள் மற்றும் சர்வீஸ் கோப்புகள் (Service Registers) உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

அரசாங்க விதிகளுக்குப் புறம்பாக, முறையற்ற வழிகளில் பணி மாறுதல் உத்தரவுகளைப் பிறப்பித்த உயர் அதிகாரிகள் யார் யார், அதற்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் மற்றும் ஊழியர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விசாரணையின் முடிவில், முறைகேட்டில் தொடர்புடைய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் முறையற்ற வழியில் இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மீது கடுமையான சட்டரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »