திருநெல்வேலி, ஜூன் 3: 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர்கள் சங்கத்தின் 26-ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில் உள்ள பொறியாளர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், மாநகர ஓய்வூதியர்கள் சங்கச் செயலாளர் ராஜகோபால் வரவேற்புரை ஆற்றினார். அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சீத்தாராமன், அமைப்பாளர் சண்முக சுந்தர்ராஜ், திருநெல்வேலி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் நல்லபெருமாள், ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவான உரையை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, சங்கத்தின் துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கிய கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களைச் சமர்ப்பித்தார்.
இக்கூட்டத்தில், மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, 70 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்கி அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசுப் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய மூத்த குடிமக்களின் நலனைக் கருதி, அவர்களுக்குப் பயணக் கட்டணத்தில் 50 சதவீதச் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட்டது.
Also read : இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இப்பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பாளையங்கோட்டை இணையவழி குற்றப்பிரிவு (சைபர் க்ரைம்) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.பி. முருகன் மற்றும் சைபர் க்ரைம் காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகா ஆகியோர் கலந்துகொண்டனர். அண்மைக்காலமாக மூத்த குடிமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் பண மோசடிகள் குறித்துப் பேசிய அவர்கள், இணையவழி குற்றங்கள் சார்ந்த விழிப்புணர்வு உரையை ஆற்றினர்.
அதிநவீனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி முதியவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கிய அதிகாரிகள், பொதுமக்கள் யாரும் சைபர் குற்றங்களுக்கு இலக்காக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும், ஆன்லைன் பண மோசடிக்கு உள்ளானால் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய அவசர உதவி எண்ணான ‘1930’ என்ற விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி, முதியவர்களிடையே அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியினை ராஜ்குமார் அருளானந்தம் முழுமையாகத் தொகுத்து வழங்கினார். நிறைவாக, சங்கத்தின் பொருளாளர் செல்வராஜ் ஆண்டின் வரவு-செலவு அறிக்கையைத் தாக்கல் செய்து, விழாவில் திரளாகக் கலந்துகொண்ட உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்








