காரைக்கால், May 27 : புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக விமரிசையாக நடைபெற்றது

சைவ சமயத் திருத்தலங்களில் சப்தவிடங்க ஸ்தலங்களில் ‘நகவிடங்கர்’ தலமாகவும், நவக்கிரக ஸ்தலங்களில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் அனுக்ரக மூர்த்தியாக எழுந்தருளியுள்ள பெருமையைக் கொண்டது இக்கோவில். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தின் ஆண்டுப் பெருவிழாவான பிரம்மோற்சவம் கடந்த மாதம் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் முறைப்படி துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
உன்மத்த நடனத்துடன் தேருக்கு எழுந்தருளிய தியாகராஜர்: விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ செண்பக தியாகராஜர், ஸ்ரீ நீலோத்பாலாம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தங்களது யதாஸ்தானத்தில் இருந்து புறப்பட்டனர்.
Also Read : 108 திவ்ய தேசம் : முதல் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம்- ரங்கநாதரின் அதிசயங்கள் என்ன?
தொடர்ந்து, தியாகராஜப் பெருமானுக்கே உரிய பாரம்பரிய ‘உன்மத்த நடனமாடி’ ஆலய பிரகாரங்களை வலம் வந்த சுவாமி, அதிகாலை வேளையில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் வடம் பிடிக்கப்பட்ட ஐந்து தேர்கள்: இன்று அதிகாலை தேர்களுக்குச் சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேரோட்டம் முறைப்படி துவங்கியது. முதலில் விநாயகர் தேரும், அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியர் தேரும் இழுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய ஈர்ப்பான ஸ்ரீ செண்பக தியாகராஜர் வீற்றிருந்த பெரிய தேரை “நள்ளாறா… தியாகேசா…” என்ற பக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பெரிய தேரைத் தொடர்ந்து ஸ்ரீ அம்பாள் தேரும், இறுதியாக ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேரும் என ஐந்து தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் பக்திப் பரவசத்துடன் இழுக்கப்பட்டன.
பாரம்பரிய இசை முழக்கம்: தேரோட்ட விழாவின் போது, கேரள மாநிலத்தின் பாரம்பரிய செண்டை மேளமும், தமிழகத்தின் பாரம்பரிய இசை வாத்தியங்களான தாரை, தப்பட்டை மற்றும் மங்கள வாத்தியங்களும் முழங்கின. இந்த இருமாநில கலாசார இசை சங்கமம் தேரோட்டத்திற்கு கூடுதல் சிறப்பைச் சேர்த்தது.
இந்தத் தேரோட்ட விழாவைக் காண்பதற்காக காரைக்கால் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக, பொதுமக்களும் பக்தர்களும் குடும்பம் குடும்பமாக வந்து விழாவில் பங்கேற்றனர்.
முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு: முன்னதாக நடைபெற்ற தேரோட்டத் தொடக்க நிகழ்வில், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, மண்டல காவல் கண்காணிப்பாளர் பழனிவேலு, ஆலய நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் தருமபுர ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாதன் சுவாமிகள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
விழாவிற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செய்திருந்தன.








