சிறப்பு கட்டுரை : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான அரசியல் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், தேர்தல் களத்தின் புதிய திருப்பமாக தெலுங்கு பூர்வீகம் கொண்ட வாக்காளர்கள் மிக முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகின்றனர். ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே முக்கோணப் போட்டி நிலவும் தற்போதைய சூழலில், சில குறிப்பிட்ட தொகுதிகளின் தேர்தல் முடிவை முழுமையாக தீர்மானிக்கும் பலத்தை இந்த வாக்காளர்கள் பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல தசாப்தங்களாகத் தமிழகத்தில் குடியேறி வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள், குறிப்பாக சென்னை, வேலூர், திருவள்ளூர், கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். தொழில், கல்வி மற்றும் வர்த்தக ரீதியாகப் பல ஆண்டுகளாகத் தமிழகத்தின் சமூகக் கட்டமைப்போடு இணைந்துவிட்ட இந்த சமூகங்கள், தற்போதைய நெருக்கடியான தேர்தல் சூழலில் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய வாக்கு வங்கியாக மாறியுள்ளன. இதனால், இந்த சமூகங்களை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சார உத்திகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன. அவர்களின் மொழி, கலாசாரம் மற்றும் சமூக நலத் தேவைகளை முன்னிறுத்திப் புதிய வாக்குறுதிகளும் அரசியல் மேடைகளில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத் தேர்தல் 2026 : கண்ணூரில் வன்முறை; 3 மாநிலங்களில் சாதனை வாக்குப்பதிவு
ககன்யான் மிஷனில் இந்தியா புதிய சாதனை! ISRO-வின் 2வது Air Drop Test வெற்றி
தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடியாக இருக்கும் நிலையில், மும்முனைப் போட்டி நிலவும் தற்போதைய சூழலில் ஒரு சிறிய சதவீத வாக்கு மாற்றம் கூட ஒட்டுமொத்த தேர்தல் முடிவையும் தலைகீழாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டது. இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் பங்களிப்பு ஒருபுறம் ஆதிக்கம் செலுத்தினாலும், தெலுங்கு வேர்களைக் கொண்ட வாக்காளர்கள் எந்நிலையிலும் மாறக்கூடிய ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ (Swing voters) எனப்படும் தேர்தல் திருப்பங்களை ஏற்படுத்தும் சக்தியாக மாறியுள்ளனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த முக்கிய வாக்கு வங்கியைத் தங்களின் பக்கம் ஈர்ப்பதற்காக பிரதான கட்சிகள் அனைத்தும் தங்களின் பாரம்பரிய தேர்தல் உத்திகளை அதிரடியாக மாற்றி வருகின்றன. திமுக அரசு தனது தற்போதைய சமூக நலத் திட்டங்களை முதன்மைப்படுத்தி இவர்களின் ஆதரவைக் கோர, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நிர்வாகத் திறன் மற்றும் விலைவாசி கட்டுப்பாடு போன்ற மக்கள் சார்ந்த அன்றாடப் பிரச்சினைகளை முன்வைத்து நகர்ப்புற வாக்காளர்களை அணுகுகின்றன. அதேநேரத்தில், முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம், இந்த சமூகத்தின் இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் கவரும் வகையில் தனது பிரச்சாரப் பாதையை வடிவமைத்துள்ளது.





