புதுச்சேரி, மே 30 : தமிழகத்தின் நிதிநிலை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் அது பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் தமிழக நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் என். மரியவில்சன் தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளித்தார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது சொந்த ஊரான புதுச்சேரிக்கு அரசுமுறைப் பயணமாக அமைச்சர் மரிய வில்சன் இன்று வருகை தந்தார். புதுச்சேரி கூடைப்பந்து சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த தேசியப் போட்டிக்குத் தமக்கு அழைப்பு விடுத்த இந்தியக் கூடைப்பந்து கூட்டமைப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த மண்ணுடனான தனது பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
கடந்த 1992 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் இதே விளையாட்டு மைதானத்தில்தான் தாம் ஒரு கூடைப்பந்து வீரராக விளையாடியதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதும் அதே கட்டமைப்பு மாறாமல் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். இந்த மைதானத்தில் ஒரு தன்னார்வலராகப் பணியாற்றியதும், உள்ளூர் கிளப் அணிக்காகப் பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடியதும் தனது வாழ்வின் மறக்க முடியாத பக்கங்கள் என்றார். அந்தத் காலகட்டத்தில் தமக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் ரகோத்மன் மற்றும் பழைய நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கக் கிடைத்த இந்த வாய்ப்பு மிகுந்த மனநிறைவைத் தருவதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தாம் இன்று ஒரு மாநிலத்தின் நிதி அமைச்சராக இந்த மேடையில் நின்றாலும், ஒரு அமைச்சராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை விட, ஒரு சாதாரண கூடைப்பந்து விளையாட்டு வீரராக இங்கு நிற்பதையே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுவதாகத் தெரிவித்தார். கூடைப்பந்து என்பதுதான் தனது வாழ்க்கையின் முதல் அடையாளம் என்றும், அந்த விளையாட்டின் மூலம் கற்றுக்கொண்ட ஒழுக்கத்தையும் அடிப்படைகளையும் கொண்டுதான் தனது வாழ்க்கையையே தாம் கட்டமைத்துக் கொண்டதாகவும் அவர் நெகிழ்ந்தார்.
அன்றைய காலகட்டத்தில் புதுச்சேரியில் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்திற்குத் தானே ஒரு நேரடி உதாரணம் என்று குறிப்பிட்ட அவர், தனது வழிகாட்டியாக இருந்த வில்லியம்ஸ் என்பவரை இந்நேரத்தில் நினைவுகூர்ந்தார். ரகோத்மன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வில்லியம்ஸ் அவர்கள்தான் தனது விளையாட்டு ஆர்வத்திற்கு வித்திட்டவர் என்றும், தொடக்கத்தில் தாங்கள் சென்ட்ரல் பள்ளியில் விளையாடத் தொடங்கி, பின்னர் இங்கு நடத்தப்பட்ட பல்வேறு தொடர்களில் பங்கேற்க தங்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். பெட்டி செமினார் பள்ளி மற்றும் தொரிமேட் அரசுப் பள்ளியில் பயின்ற தனது பள்ளிப் பருவம், விளையாட்டின் மூலமாகவே முற்றிலும் நேர்மறையான பாதையில் மாறியதாக விவரித்தார். வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கூடைப்பந்து விளையாட்டு தன்னை விட்டு எப்போதும் பிரியவில்லை என்றும், கல்லூரி நாட்களிலும் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய தான், இன்று வரை தொடர்ந்து கூடைப்பந்து விளையாடி வருவதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து, சக கூடைப்பந்து வீரர்களாக இந்த விழாவில் பங்கேற்பது தங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு அரசியல் மற்றும் நிதித்துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர் மரியவில்சன் விளக்கமளித்தார். தமிழகத்தின் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் (Revised Budget) எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற கேள்விக்கு, அதற்கான தொடக்கக்கட்ட முன்னெடுப்புகள் அனைத்தும் மிகத் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களுடன் இணைந்து கூட்டு முயற்சியாக (Teamwork) பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதால், கூடிய விரைவில் திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
தமிழக அரசின் மீது தற்போது பெரிய அளவில் கடன் சுமை உள்ள சூழ்நிலையில், புதிய அரசு பதவியேற்பிற்கு முன்பாக மக்களுக்கு அளித்த பல்வேறு நிதி சார்ந்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களும், நிதி மேலாண்மை குறித்த அனைத்து விபரங்களும் வரவிருக்கும் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் விரிவாக இடம்பெறும் என்று தெளிவுபடுத்தினார்.
தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற அடுத்த கேள்விக்கு, புதிய அரசு பொறுப்பேற்று இன்னும் 20 நாட்கள்தான் ஆகிறது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அரசு நன்கு உணர்ந்துள்ளது என்றும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது இதற்கான முழுமையான விபரங்கள் வெளியாகும் என்றும் கூறினார்.
நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு குறித்துப் பேசுகையில், “முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி, தமிழகத்தின் தற்போதைய உண்மையான நிதி நிலவரத்தை விளக்கும் வெள்ளை அறிக்கையை பொதுமக்களிடம் வெளிப்படையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்கான தயாரிப்புப் பணிகள் தற்போது தகுந்த நடைமுறைகளுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் (One or two weeks) வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசுத் துறைகளில் கைரேகை பதிவு சார்ந்த (Fingerprint Project) முக்கிய திட்ட அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், திட்டத்தில் எந்தப் பின்னடைவும் இல்லை என்று மறுத்தார். திட்டமிடப்பட்ட கால அட்டவணையில் (Schedule) தவிர்க்க முடியாத காரணங்களால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர, திட்டம் தள்ளிப் போகவில்லை என்றும், மிக விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வத் தொடக்க விழா நடைபெறும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் சமீபத்திய டெல்லி பயணம் மற்றும் பிரதமருடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு புதிய முதலமைச்சர் பதவியேற்ற பிறகு நாட்டின் பிரதமரைச் சந்திப்பது என்பது முற்றிலும் ஒரு நெறிமுறை சார்ந்த (Protocol) பயணமே ஆகும் என்றார். இந்தச் சந்திப்பின் போது மத்திய நிதி அமைச்சரையும் முதலமைச்சர் சந்தித்துப் பேசியுள்ளார் என்றும், வரும் நாட்களில் தமிழகத்திற்கான கோரிக்கைகள் மற்றும் அதன் மூலமாகக் கிடைக்கப் பெறும் விவரங்கள் குறித்த சாதகமான முடிவுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் கூறி அமைச்சர் நிறைவு செய்தார்.








