Tirunelveli : நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்து அண்மையில் திரைக்கு வந்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம். நெல்லை ரசிகர்களுடன் இணைந்து தனது திரைப்படத்தைக் காண்பதற்காக ஆர்.ஜே. பாலாஜி நெல்லைக்கு வருகை தந்தார்.

அவருக்குத் திரையரங்கு நிர்வாகம் மற்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தினர் சார்பில் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகளுடன் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மண்ணின் உற்சாக வரவேற்பில் நெகிழ்ந்துபோன ஆர்.ஜே. பாலாஜி, ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியதோடு, அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் சுயபடம் (Selfie) எடுத்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.ஜே. பாலாஜி, படம் சந்தித்த சவால்கள், திரையுலகில் நிலவும் அரசியல் மாற்றங்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகவும், யதார்த்தமாகவும் பகிர்ந்து கொண்டார்.
“வெற்றிடம் என்ற பேச்சை நான் ஏற்கவில்லை” : தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக இருக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அதனால் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் வெற்றிடம் குறித்த கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி மிகவும் நிதானமான பதிலை அளித்தார்.
“திரையுலகைப் பொறுத்தவரை எப்போதுமே ‘வெற்றிடம்’ என்ற ஒன்றிற்கு இடமே கிடையாது. நடிகர் விஜய் அரசியலுக்குச் சென்று, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அவர் அரசியலுக்குச் சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய காலி இடம் உருவாகிவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவரைப் போன்ற மாபெரும் ஆளுமைகள் சென்றுவிட்டாலும், இன்னும் திரையுலகைத் தாங்கிப் பிடிக்க நடிகர் சூர்யா போன்ற பல முன்னணிப் பெரிய நட்சத்திரங்கள் இங்கு இருக்கிறார்கள். எனவே, சினிமா என்றும் தன் ஓட்டத்தை நிறுத்தாது” என்று அவர் குறிப்பிட்டார்.
சவால்களை வென்ற ‘கருப்பு’: கண்ணீருக்குக் கிடைத்த பரிசு
இத்திரைப்படம் திரையரங்கிற்கு வருவதற்கு முன்பு சந்தித்த விநியோகச் சிக்கல்கள் மற்றும் மன உளைச்சல்கள் குறித்துப் பேசிய அவர், “எந்தப் பின்னணியும் இல்லாமல், வெறும் சினிமா ஆசையோடு மட்டும் சென்னைக்கு வந்து, ரத்தம் சிந்தி உழைத்த பலரின் கூட்டு உழைப்புதான் இந்த ‘கருப்பு’ திரைப்படம். படம் ரிலீஸாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் மனமுடைந்து, நிலைதடுமாறி நான் கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்டது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு ஒரு கடுமையான மன உளைச்சலைச் சந்தித்தோம். ஆனால், என் மீதும் நான் நம்பும் கடவுள் மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, என் நியாயத்தைப் புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள், இன்று இந்தத் திரைப்படத்தைக் குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து கொண்டாடி வருகிறார்கள். இந்தத் தருணம் எனக்குக் அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.
மேலும் படத்தின் உள்ளடக்கம் குறித்துப் பேசிய அவர், “பொது மேடைகளில் கடவுள் பக்தி சார்ந்த படங்களை மிக மோசமாக விமர்சிப்பவர்கள், உண்மையில் சாமானிய மக்களிடமிருந்தும், அவர்களின் உணர்வுகளிலிருந்தும் எவ்வளவு தூரம் விலகித் தள்ளி இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியே நிரூபித்துக் காட்டியிருக்கிறது” என்று சாடினார்.
இப்படத்தின் கதைக்களம் உருவான விதம் குறித்துப் பகிர்ந்த ஆர்.ஜே. பாலாஜி, “இப்படம் பொள்ளாச்சி மாசாணி அம்மன் வழிபாட்டு முறையையும், அங்கு நீதிக்காக மக்கள் மிளகாய் அரைத்து வழிபடும் ஆன்மீக நம்பிக்கையையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதேபோன்றதொரு நம்பிக்கை நெல்லை உயர் நீதிமன்ற மகாராஜா கோவிலிலும் இருப்பதை மக்கள் கூறுகிறார்கள்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது வீட்டில் வழக்கம்போல சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது நடிகர் சூர்யாவிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த இக்கட்டான நேரத்தில் வந்த அந்த அழைப்பைக் கடவுளின் நேரடி அழைப்பாகவே நான் கருதினேன். உடனே அவரிடம் இந்தக் கதையைக் கூறி, படமாக்கத் தொடங்கினோம். தணிக்கைக் குழுவினர் (Censor Board) படத்தின் மையக் கருத்தையும், அதன் ஆழத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டு, எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து சான்றிதழ் வழங்கினர்” என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
அரசியல் முத்திரைகளும் ‘கருப்பு 2’ அறிவிப்பும்
தனக்குக் குத்தப்படும் அரசியல் முத்திரைகள் குறித்துப் பேசிய அவர், “சமூக வலைதளங்களில் சிலர் என்னை ‘பாஜகவாதி’ என்கிறார்கள், வேறு சிலர் ‘திமுகவாதி’ என்கிறார்கள். என் மீது எந்த வகையான முத்திரையைக் குத்தினாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் என்ன செய்கிறேன், என் நோக்கம் என்ன என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். சினிமாவில் கடவுள் மறுப்புப் படங்களும் வர வேண்டும், கடவுள் பக்திப் படங்களும் வர வேண்டும். அது சாம்பாரில் போடும் காய்கறிகளைப் போன்றதுதான். எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது, அதனால் நான் ஆன்மீகம் சார்ந்த கதையைத் தேர்ந்தெடுத்து எடுத்திருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புக்குப் பதிலளித்தவர், “கருப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் (Part 2) கட்டாயம் வெளிவரும். ஆனால், அதற்கான கதை எழுதும் பணியை நான் இன்னும் தொடங்கவில்லை. ‘எல்.கே.ஜி’ படத்தில் இருந்த நான், இந்தப் படத்தில் எப்படி ‘யு.கே.ஜி’ ஆக மாறியிருக்கிறேனோ, அதேபோல் அடுத்த பாகத்தில் எனது அடுத்த கட்ட வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது கதை எழுதும்போது உங்களுக்கே புரியும். அடுத்த படம் எப்போது என்ற பதற்றமெல்லாம் இப்போது இல்லை. மக்கள் கொடுத்த இந்த வெற்றியை, இந்த நிமிடம் முழுமையாக அனுபவித்து வருகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறி விடைபெற்றார் ஆர்.ஜே. பாலாஜி.
– செய்தியாளர்களுடன் R.J.Balaji












