‘பெண்கள் இடஒதுக்கீடு பெயரில் அதிகார மாற்றமா’ – பாராளுமன்ற சிறப்பு கூட்டம் சூடுபிடித்த அரசியல் மோதல்

புதுடெல்லி , ஏப்ரல் 16: இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெற உள்ள நிலையில் பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான மசோதாக்கள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் சட்டம்’ கடந்த 2023 ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்ட நிலையில் அதனை வரும் 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாக விரைந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு தற்போதைய சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய அரசியல் சாசன திருத்த மசோதாக்களை கொண்டு வருகிறது. பெண்களை மதிப்பது நாட்டை மதிப்பதற்கு சமம் என்று வலியுறுத்தும் பிரதமர் இந்த சட்டத்தை முன்னெடுத்து வரும் வேளையில் இதன் பின்னணியில் நாட்டின் அரசியல் அதிகார மறுவினியோகம் ஒளிந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.

இந்த ஒட்டுமொத்த விவாதத்தின் மையப்புள்ளியாக பெண்கள் இடஒதுக்கீடு இல்லை என்றும் அதன் பின்னால் இருக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைதான் உண்மையான அரசியல் சர்ச்சைக்கு காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பதே இந்த தொகுதி மறுவரையறை திட்டமாகும். மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி தற்போதைய லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்பதில் இருந்து 800க்கும் மேல் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இந்த புதிய தொகுதி பகிர்வு முறையை பெண்கள் இடஒதுக்கீட்டுடன் இணைத்து செயல்படுத்துவதே தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இது வெறும் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கான நகர்வு அல்ல என்றும் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் சமநிலையை பாதிக்கும் மற்றும் அதிகாரத்தை மறுபகிர்வு செய்யும் ஒரு மறைமுக முயற்சி என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக இந்த தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் கூடுதல் பிரதிநிதித்துவம் மற்றும் இடங்கள் கிடைக்கக்கூடும் என்றும் அதே வேளையில் மக்கள் தொகையை முறையாகக் கட்டுப்படுத்திய தெற்கு மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கின்றன. மேலும் இந்த புதிய மாற்றங்கள் பிற்படுத்தப்பட்ட (OBC), தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உண்மையான அரசியல் பிரதிநிதித்துவத்தை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில அரசியல் வட்டாரங்களில் மிக அதித தீவிர கவனத்தைப் பெற்றுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை மேலாண்மையை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாட்டிற்கு மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் புதிய தொகுதி மறுவரையறை பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்களின் விகிதாச்சாரம் குறைய வாய்ப்புள்ளதுடன் தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் செல்வாக்கு, நிதிப் பகிர்வு மற்றும் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஆகியவை நேரடியாகப் பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்த அச்சங்களையும் குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது பெண்களுக்கு அரசியலில் மிக உயரிய அதிகாரத்தை வழங்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் என்று அரசுத் தரப்பு விளக்கம் அளிக்கிறது. எந்தவொரு மாநிலத்திற்கும் தற்போது இருக்கும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்றும் ஒட்டுமொத்த நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலமாக அனைத்து மாநிலங்களுக்குமான அரசியல் சமநிலை மற்றும் பிரதிநிதித்துவம் எவ்வித பாதிப்புமின்றி முழுமையாகக் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இருப்பினும் இந்த மசோதாக்கள் இந்திய அரசியலில் வட-தெற்கு பிளவை ஆழப்படுத்துவதுடன் சமூக நீதி மற்றும் மாநிலங்களின் தன்னாட்சி உரிமை குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன. வரும் 2029 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் களத்தை இப்போதே தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான அரசியல் திருப்புமுனையாக இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் மாறியுள்ளதால் டெல்லி அரசியல் களம் தற்போது உச்சகட்ட பரப்பரப்பில் உள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *