நெல்லை , ஏப்ரல் 26 : நெல்லை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 31 வயது வாலிபர் வேல் மாரியப்பன். கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள பிரபல தனியார் டயர் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெலிகிராம் செயலி வழியாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலை செய்து தினமும் பல்லாயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்ட வேல் மாரியப்பன் அந்த குறுஞ்செய்தியில் இருந்த இணையதள லிங்க்கை கிளிக் செய்துள்ளார். அது அவரை ஒரு புதிய நபாின் சாட்டிங் பக்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
அங்கு அவருக்கு சில எளிய ஆன்லைன் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் வெறும் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் அதற்குரிய லாபத்தோடு சேர்த்து கூடுதல் தொகை கிடைக்கும் என்று அந்த கும்பல் நம்ப வைத்துள்ளது. அவர்கள் சொன்னபடியே வேல் மாரியப்பன் பத்தாயிரம் ரூபாயை டிஜிட்டல் முறையில் செலுத்தியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது கணக்கிற்கு லாபத் தொகையான 2,179 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 12,179 ரூபாயை அந்த கும்பல் திருப்பி அனுப்பியுள்ளது. முதலீடு செய்த உடனே கைமேல் பலன் கிடைத்ததால் இது உண்மையான பகுதி நேர வேலைதான் என்று வேல் மாரியப்பன் முழுமையாக நம்பியுள்ளார்.
இரை தேடி வரும் மீனுக்கு ஆரம்பத்தில் சிறிய புழுவை காட்டி தூண்டில் போடுவது போன்ற சைபர் குற்றவாளிகளின் இந்த முதல் கட்ட உத்தியை வேல் மாரியப்பன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதல் டாஸ்க்கில் கிடைத்த அதீத நம்பிக்கையின் காரணமாக அடுத்தடுத்து அவர்கள் காட்டிய பேராசை வலைக்குள் அவர் மிக வேகமாக சிக்கியுள்ளார். அடுத்தடுத்த கட்டங்களில் பெரிய அளவிலான டாஸ்க்குகள் மற்றும் விஐபி மெம்பர்ஷிப் என்ற பெயரில் பல்வேறு தவணைகளாக வேல் மாரியப்பனை பெரும் தொகையை முதலீடு செய்யுமாறு அந்த கும்பல் வற்புறுத்தியுள்ளது. லாப ஆசையில் அவரும் வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அடுத்தடுத்து பணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு பல கட்டங்களாக வேல் மாரியப்பன் தரப்பிலிருந்து மொத்தம் 5,65,949 ரூபாய் வரை அந்த மோசடி கும்பலின் வங்கி கணக்குகளுக்குச் சென்று சேர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த தொகையையும் அதற்குரிய லாபத்தையும் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோதுதான் வேல் மாரியப்பனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இணைய பக்கத்தில் பணம் எடுப்பதற்கான ஆப்ஷன்கள் முடக்கப்பட்டிருந்தன. டெலிகிராமில் தொடர்பு கொண்டபோது இன்னும் கூடுதல் தொகை செலுத்தினால் மட்டுமே மொத்தப் பணத்தையும் எடுக்க முடியும் என்று புதிய நிபந்தனைகளை அவர்கள் விதித்துள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேல் மாரியப்பன் அதிர்ச்சியடைந்தார். இந்த நூதன மோசடியில் ஒட்டுமொத்தமாக அவர் இழந்த அசல் தொகை மட்டும் 5,53,770 ரூபாயாகும்.
இதுகுறித்து வேல் மாரியப்பன் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் களமிறங்கி தீவிர விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்டவர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் மோசடி கும்பல் பயன்படுத்திய மொபைல் எண்களின் ஐபி முகவரிகளை வைத்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் கேரளா மாநிலத்தில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக கேரளா விரைந்த நெல்லை தனிப்படை போலீசார் எர்ணாகுளம் பகுதியில் அதிரடி வேட்டை நடத்தி இந்த மோசடியில் தொடர்புடைய தில்லான் மற்றும் அஜித் ஆகிய இரு வாலிபர்களைக் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ஏராளமான சிம்கார்டுகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருப்பது தெரியவந்துள்ளது. கைதான இருவரையும் நெல்லைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் வழியாக இந்த ‘ஆன்லைன் டாஸ்க் ஸ்கேம்’ என்னும் பகுதி நேர வேலை மோசடி மிகத் தீவிரமாக பரவி வருகிறது. வீட்டில் இருந்தபடியே யூடியூப் வீடியோக்களுக்கு லைக் போடுவது கூகுள் மேப்பில் ரேட்டிங் கொடுப்பது போன்ற எளிய வேலைகளுக்கு தினமும் ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று வரும் குறுஞ்செய்திகளை மக்கள் எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.







