புதுடெல்லி, ஜூன் 8: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் முறைகேடுகளைத் தடுக்கவும், மாணவர்களின் தகுதியைத் தீர்மானிக்கவும் மத்திய அரசால் நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் தொடர் எதிர்ப்புகள் கிளம்பினாலும் நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்தச் சூழலில் தற்போதும் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இந்தத் தகவல்களுக்குத் தேசிய தேர்வு முகமை (NTA) உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், பெற்றோர் மற்றும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
also read : “NEET ரத்து : MP மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி மறுபடி தேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை!”
கடந்த காலங்களில் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் உண்மையாக நிரூபணமானதால் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. எனவே இந்த முறை மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு போன்ற சர்ச்சை ஏற்பட்டு, அரசுக்கு மேலும் நெருக்கடி உருவாவதைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்விற்கான கேள்வித்தாள்களை வடிவமைத்த ஒட்டுமொத்த நிபுணர்கள் குழுவும், தேர்வு முழுமையாக முடியும் வரை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர். இக்குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வெளி உலகத் தொடர்பில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர்களுக்கு மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனங்களும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது. வெளி உலகில் உள்ள வேறு நபர்கள் யாருடனும் அவர்கள் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாதபடி வீட்டுச் சிறை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் எந்தவொரு முறைகேடோ அல்லது வினாத்தாள் கசிவு போன்ற சர்ச்சைகளோ இல்லாமல் இந்த மறுதேர்வை மிகத் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் இம்முறை தேர்வு எவ்வித தடையுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








