நாஞ்சில் சம்பத் கொடுத்த அதிரடி பதில்கள் : உதயநிதி ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் முன்வைத்த நாஞ்சில் சம்பத், விஜயின் அரசியல், சட்டசபை, சமூக நீதி, ரீல்ஸ் ஆட்சி குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாட்டில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விஜயின் அரசியல் பயணம் மற்றும் அவரைச் சுற்றியுள்ள விமர்சனங்களுக்கு தீவிரமாக பதிலளித்துள்ளார் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், திமுக, சட்டசபை விவாதங்கள், “ரீல்ஸ் ஆட்சி” குற்றச்சாட்டு, “ஸ்கிரிப்ட் பேச்சு” விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் முன்வைத்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றன.
ஒரு இணைய ஊடக பேட்டியில் பேசிய நாஞ்சில் சம்பத், “தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற எந்த தகுதியும் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடையாது” என்ற கடுமையான விமர்சனத்துடன் தனது கருத்துக்களை தொடங்கினார். சமூக நீதி குறித்து அரை மணி நேரம் பேச சொல்லுங்கள், நான் பேசுவதை நிறுத்துகிறேன் என்று அவர் சவால் விடுத்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
“சட்டசபையில் இருந்திருந்தால் பதில் கிடைத்திருக்கும்”
சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை என்ற விமர்சனத்துக்கும் நாஞ்சில் சம்பத் பதிலளித்தார். “நீ சட்டமன்றத்தில் இருந்திருந்தா பதில் சொல்லி இருப்பாரு. வெளிநடப்பு போன பிறகு எப்படி பதில் சொல்வது?” என்று அவர் கேள்வி எழுப்பினார். சட்டசபை விவாதங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் வெளியேறும் எதிர்க்கட்சியின் அணுகுமுறையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஸ்கிரிப்ட் பேச்சு” சர்ச்சைக்கு பதிலடி
விஜய் எப்போதும் கையில் பேப்பர் வைத்தே பேசுகிறார் என்ற விமர்சனத்துக்கும் நாஞ்சில் சம்பத் விரிவாக பதிலளித்தார். “ஒரு செய்தியை துல்லியமாக சொல்ல குறிப்பை வைத்துக் கொள்வது தவறு அல்ல. ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கையிலும் குறிப்புகள் இருக்கும்” என்றார்.
அதே நேரத்தில், “இந்திய அரசியல் வரலாற்றில் பதவி ஏற்பு உறுதிமொழியை பார்க்காமல் ஏற்ற ஒரே தலைவர் விஜய்” என்று கூறிய அவர், விஜயின் மேடை பேச்சுத் திறனை பாதுகாத்தார். “குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேகத்தில் போகும் அரசு” என்ற விஜயின் சட்டசபை பதிலை நினைவுகூர்ந்து, அது ஸ்கிரிப்ட் அல்ல அரசியல் பதில் என குறிப்பிட்டார்.
“குட்டி ஸ்டோரி” விமர்சனத்துக்கும் விளக்கம்
விஜய் பேசும் போது “குட்டி ஸ்டோரி” சொல்கிறார் என்ற விமர்சனத்துக்கும் நாஞ்சில் சம்பத் தனி விளக்கம் அளித்தார். “அறிஞர் அண்ணாவே 34 இடங்களில் 34 கதைகள் சொன்னவர். மக்களின் மனதில் கருத்தை எளிதில் கொண்டு சேர்க்க கதைகள் உதவும்” என்றார். கதைகள் சொல்லுவதை விமர்சிப்பவர்கள் அரசியலில் “குட்டி சுவர்கள்” என்றும் அவர் விமர்சித்தார்.
“கோட் சூட் CM” விமர்சனம்
விஜயின் உடை அலங்காரம், குறிப்பாக கோட் சூட் அணிவது குறித்த விமர்சனங்களுக்கும் பதில் அளித்தார் நாஞ்சில் சம்பத். “யாரும் செய்யாததை செய்கிற தலைவர் விஜய். எந்த உடை அணிந்தாலும் அவருக்கு அழகாக இருக்கும்” என்றார். விக்ரவாண்டியில் ராம்ப் வாக் நடந்த சம்பவத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்.
கருப்பு நிற கோட், வெள்ளை சட்டை அணிந்து வந்த விஜயை மக்கள் விரும்புவதாகவும், அது தேர்தலில் கூடுதல் வாக்குகளாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கரூர் சம்பவம் மற்றும் 41 குடும்பங்கள்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரை தொடர்ந்து விஜய் அந்த இடத்தை விட்டு சென்றது குறித்த விமர்சனத்துக்கும் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்தார். “விஜய் அங்கேயே இருந்திருந்தால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் கரூருக்கு வந்திருப்பார்கள். மேலும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம்” என்றார்.
அந்த 41 குடும்பங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
“ரீல்ஸ் ஆட்சி அல்ல, ரியல் ஆட்சி”
திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட “ரீல்ஸ் ஆட்சி” குற்றச்சாட்டுக்கும் நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்தார். “இது ரீல்ஸ் ஆட்சி அல்ல, ரியல் ஆட்சி” என்று கூறிய அவர், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசியல் அணுகுமுறையே விஜயின் அரசியல் என விளக்கினார்.
அதே நேரத்தில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது போன்ற விவகாரங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
“பாஜக B Team அல்ல”
தவெகவை “பாஜக B Team” என்று விமர்சிப்பதையும் நாஞ்சில் சம்பத் மறுத்தார். “அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக” என்ற விஜயின் அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் நினைவுபடுத்தினார்.
விஜயமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொண்டர்களே “கொள்கை எதிரி பாஜக” என்று முழங்கியதாகவும் அவர் கூறினார். “பாஜகவோடு எங்கும் சமரசம் செய்யவில்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“கூத்தாடி” விமர்சனத்துக்கு எம்ஜிஆர் உதாரணம்
சினிமா பின்னணி கொண்ட அரசியல் குறித்து பேசும்போது, எம்ஜிஆரையும் ஒருகாலத்தில் இதேபோல விமர்சித்ததாக நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார். “கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே” என்று கூறிய அவர், அண்ணா, எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் போன்றவர்களின் அரசியல் பயணத்தையும் எடுத்துக்காட்டினார்.
“திரையுலகில் இருந்து வந்தவன் தான் எங்கள் தலைவர்” என்று கூறிய அவர், கலை உலகமும் தமிழ்நாட்டு அரசியலும் நீண்டகாலமாக ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றார்.
“உதயநிதி எதிர்க்கட்சி தலைவர் என்றால்…”
பேட்டியின் இறுதியில் மீண்டும் உதயநிதி ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத், “திமுக இவரை எதிர்க்கட்சி தலைவராக ஆக்கியது மிகப்பெரிய தவறு” என்றார். ஐ. பெரியசாமி, கே.என். நேரு, சக்கரபாணி போன்ற மூத்த தலைவர்களை குறிப்பிடிய அவர், சீனியாரிட்டிக்கும் அனுபவத்திற்கும் மரியாதை தர வேண்டுமென கூறினார்.
“உதயநிதி தான் எதிர்க்கட்சி தலைவர் என்றால் அடுத்த பொதுத்தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட ஆக முடியாது” என்ற அவரது கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FAQ
நாஞ்சில் சம்பத் உதயநிதி ஸ்டாலின் குறித்து என்ன கூறினார்?
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க தேவையான தகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்தார்.
விஜய் மீது வந்த “ஸ்கிரிப்ட் பேச்சு” விமர்சனத்திற்கு என்ன பதில் கூறப்பட்டது?
குறிப்புகளை வைத்து பேசுவது தவறு அல்ல என்றும், விஜய் மேடை பேச்சில் தனித்திறன் கொண்டவர் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
“ரீல்ஸ் ஆட்சி” குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?
இது ரீல்ஸ் ஆட்சி அல்ல, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் “ரியல் ஆட்சி” என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
தவெக பாஜக பி டீம் என்கிற விமர்சனத்தை நாஞ்சில் சம்பத் ஏற்றாரா?
இல்லை. “அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக” என்ற விஜயின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.








