நாமக்கல் ,ஜூன் 14: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தின் ஆனி மாத பிரம்மோற்சவ திருத்தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இந்த ஆண்டுக்கான விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளும் வைபவங்களும் நடத்தப்பட்டன.

விழாவின் துவக்கமாக மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று பின்னர் சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி தந்தார். தொடர்ந்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஆலயத்தின் பிரதான கொடிமரம் முன்பாகச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. கருட உருவம் வரையப்பட்ட புனிதமான திருக்கொடிக்குத் தீப தூப ஆராதனைகள் காட்டப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் எழுப்பிய “கோவிந்தா கோவிந்தா” என்ற பக்தி கோஷத்திற்கு இடையே திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்குத் தர்ப்பை புல் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை உபசரிப்புகள் மிக விமரிசையாக நடத்தப்பட்டன. இந்தத் துவக்க நிகழ்வில் மோகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
தந்தையைக் காப்பாற்ற முயன்ற சோகம்: 100 அடி ஆழப் பாழடைந்த கிணற்றில் விழுந்து பள்ளி மாணவி பலி
இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள இந்த ஆனி மாத பிரம்மோற்சவ விழாவில் தினசரி சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் வரும் ஏழாம் நாள் மாலை 4:30 மணிக்கு மேல் பக்தி சிரத்தையுடன் நடைபெற உள்ளது.
மேலும் விழாவின் சிகர நிகழ்வாகக் கருதப்படும் ஒன்பதாம் நாள் திருவிழாவில் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் திருத்தேரில் எழுந்தருள ,பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர் பெருவிழா மிக விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.








