திருப்பூர் , ஜூன் 14 : திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ,தற்கொலை செய்ய ஓடிய தந்தையைத் தடுக்க முயன்ற 17 வயது பள்ளி மாணவி ,இருட்டில் கால் தவறி 100 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவினாசியை அடுத்த குரும்பபாளையம் செட்டிகாடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). பனியன் நிறுவனக் கூலித் தொழிலாளியான இவருக்கு ,மாலதிசெல்வி (40) என்ற மனைவியும் ,இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் கல்லூரியிலும் ,இளைய மகள் ரித்திகா (17) அவினாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர். ரவிச்சந்திரனுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக இருந்த குடிப்பழக்கம் முற்றிலும் விடுபட்டிருந்த நிலையில் ,நேற்று இரவு அவர் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கணவர் குடித்துவிட்டு வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாலதிசெல்வி ,அவரைக் கண்டித்துக் கோபமாகப் பேசியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த ரவிச்சந்திரன் ,தான் குடித்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டவாறே ,இனி உயிரோடு இருக்க விரும்பவில்லை என்றும் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து சாகப்போவதாகவும் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வேகமாக ஓடியுள்ளார்.
அரியலூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்: திரண்ட பக்தர்கள்
அவர்களது வீட்டிற்கு அருகாமையில் 100 அடி ஆழமுள்ள ,தண்ணீர் இல்லாமல் வற்றிய நிலையில் பயனற்றுப் கிடந்த பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. ரவிச்சந்திரன் அந்த கிணற்றை நோக்கி ஓடுவதைக் கண்டு பதறிய மனைவி மாலதிசெல்வியும் ,மகள் ரித்திகாவும் அவரைத் தடுப்பதற்காகப் பின்னாடியே ஓடினர். அப்போது இரவு நேரம் என்பதால் கிணற்றுப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்துள்ளது.
வேகமாக ஓடிச் சென்று தந்தையைப் பிடிக்க முயன்ற ரித்திகா ,இருட்டில் கிணற்றின் விளிம்பு தெரியாமல் திடீரென கால் இடறி 100 அடி ஆழமுள்ள அந்த வறண்ட கிணற்றுக்குள் தலைகுப்புற விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் மகள் கிணற்றுக்குள் விழுந்ததைக் கண்டு பெற்றோர் அலறித் துடித்தனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ,உடனடியாக அவினாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினருக்கும் ,சேவூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ,கயிறுகளின் உதவியுடன் 100 அடி ஆழமுள்ள கிணற்றின் அடிப் பகுதிக்கு இறங்கினர்.
அங்கு பாறைகள் நிறைந்த வறண்ட தரையில் விழுந்ததில் பலத்த காயமடைந்திருந்த மாணவி ரித்திகா ,சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் ,உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ,தற்கொலைக்கு முயன்ற தந்தையைக் காப்பாற்றச் சென்ற பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து பலியான இந்தச் சம்பவம் குரும்பபாளையம் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சேவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








