திருநெல்வேலி , ஜூன் 29: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் காவல்துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 250 பேரை மாநகர போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள அமைச்சரின் செயலைக் கண்டித்தும் அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது. அமைச்சர் சரத்குமார் பதவி விலகும் வரை இந்த போராட்டம் ஓயாது என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக நெல்லையில் இன்று இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைக்கவசம் அணியாமல் சென்ற ஏட்டுவுக்கு நெல்லை டிஐஜி தந்த விநோத பாடம்
முதல்வராகிய பின் முதன்முறையாக கரூர் செல்லும் CM விஜய்: 41 குடும்பங்களைச் சந்திக்கத் திட்டம்
திருநெல்வேலி மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட மாணவர் அணிகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் அப்துல் வகாப், ஆவுடையப்பன் மற்றும் கிரகாம்பெல் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்வில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு, முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகளான பெருமாள், விஜிலா சத்யானந்த், பரமசிவ ஐயப்பன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்து பங்கேற்றனர். வண்ணார்பேட்டை சந்திப்பில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. எனினும் காவல்துறையின் தடையை முழுமையாக நிராகரித்த திமுகவினர் திட்டமிட்டபடி வண்ணார்பேட்டையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணியினர் உட்பட சுமார் 250 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.




