டெல்லி , May 31: டெல்லி சாக்கெட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் சனிக்கிழமை இரவு ஐந்து அடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் விடிய விடிய நீடித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

சனிக்கிழமை இரவு 7:44 மணியளவில் இந்த விபத்து குறித்து டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு அவசர உதவிக்கான அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்களின் உதவியோடு உடனடியாக இடிபாடுகளை அகற்றும் பணியில் இறங்கினர். விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே மொத்தம் 10 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்து அறிவித்தனர். எஞ்சியவர்களில் மூன்று பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை டெல்லி முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதுடன், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Also read : டெல்லியில் பாகிஸ்தானின் ISI நாசவேலை திட்டம் முறியடிப்பு: 9 பேர் அதிரடி கைது
தற்போது விபத்து நடந்து 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதால், இடிபாடுகளுக்குள் இன்னும் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் உள்ளூர் முகமைகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்த வகையான கட்டிட விபத்துகளில் முதல் 24 மணி நேரம் என்பது ‘கோல்டன் பீரியட்’ எனப்படும் மிக முக்கியமான காலகட்டமாகும். ஆனால், இடிந்து விழுந்த கட்டிட அமைப்பின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், முதல் 6 முதல் 7 மணி நேரமே உயிர்களைக் காப்பாற்றுவதற்கான மிகச் சாதகமான நேரமாக இருக்கும் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும் கடந்து செல்வது இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலையிலும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. இடிபாடுகளை அகற்றுவதற்காக பெரிய ரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் அதே வேளையில், அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளும் களமிறக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களின் உடல் வெப்பநிலையைக் கண்டறியும் ‘தெர்மல் ஸ்கேனர்கள்’ மற்றும் பூமிக்கு அடியில் இருக்கும் அசைவுகளைக் கண்டறியும் ‘எர்த் ஸ்கேனர்கள்’ மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. மனிதர்களின் இதயத் துடிப்பைக்கூட உணரும் வல்லமை படைத்த இந்த உயர் ரகக் கருவிகள் மூலம், உயிர்பிழைத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று துல்லியமாகத் தேடப்பட்டு வருகிறது. இது தவிர, மோப்ப நாய்களும் இந்த மீட்புப் பணியில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் இன்று காலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மேலும் ஒருவரை மீட்டெடுத்தனர். இதன் மூலம் இடிபாடுகளில் இருந்து இதுவரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மீட்கப்பட்ட நபர் உயிருடன் இருக்கிறாரா அல்லது உயிரிழந்துவிட்டாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. எய்ம்ஸ் அதிர்ச்சி சிகிச்சை பிரிவுக்கு (Trauma Center) அவரை விரைவாகக் கொண்டு செல்வதற்காக, சம்பவ இடத்தில் இருந்து மருத்துவமனை வரை ‘கிரீன் காரிடார்’ எனப்படும் போக்குவரத்து நெரிசலற்ற தனி வழித்தடம் தற்காலிகமாக உருவாக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளது. அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னரே அவரது தற்போதைய மருத்துவ நிலை குறித்து தெளிவாகத் தெரியவரும்.
விபத்து நடந்த பகுதியில், தங்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் தேடி ஏராளமான மக்கள் கூடி நிற்பதால் பெரும் பதற்றமும் சோகமும் நிலவுகிறது. மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால், அப்பகுதியில் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கால நேரம் கடந்து கொண்டே செல்வதால், இடிபாடுகளுக்குள் இருக்கும் மற்றவர்களைப் பத்திரமாக மீட்பதற்கான இறுதிப் கட்டப் போராட்டத்தில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.













