சென்னை, ஜூன் 5: தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடைய உள்ள சூழலில், அவரது தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு நடைபெறும் மிக முக்கியத்துவம் வாய்ந்த முதல் கொள்கை முடிவு கூட்டம் இது என்பதால் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக அரசின் புதிய கொள்கை முடிவுகள், அவசரச் சட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விவாதிப்பதற்காக முக்கியமாக ஏழு கருப்பொருள்கள் (Agenda) பட்டியலிடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கின்ற புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை எந்த தேதியில் கூட்டுவது கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டிய புதிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.இதுவே இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் மற்றும் முதன்மையான பொருளாக இருக்கும் எனத் தெரிகிறது.
Also read : உதயநிதி ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவலைக் கூறுகிறார்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? ராஜினாமாவை ஏற்ற தேசிய தலைமை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மிக முக்கிய மக்கள் பிரச்சினைகளான சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் அண்டை மாநிலத்துடன் தொடர்புடைய மேகதாது அணை விவகாரம் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது.மேலும் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் மற்றும் பரவலான விவாதத்திற்குள்ளாகியிருக்கும் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் இந்த கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றி கழகம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை உடனடியாகச் செயல்படுத்துவது குறித்தும் அதற்குரிய நிதி ஆதாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அரசாணை வெளியிடுவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதல் பெறப்பட உள்ளது. அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தவுடன் இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதை ஒட்டி இன்று காலை முதலே அமைச்சர்கள் ஒவ்வொருவராகத் தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.முதலமைச்சரின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாகத் தலைமைச் செயலக வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த கூட்டத்திற்குப் பிறகு வெளியாக உள்ள புதிய அறிவிப்புகளைத் தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.








