சென்னை, ஜூன் 2 : சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. காற்றில் பரவிய கடுமையான நெடி காரணமாக, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் தொடர் இருமல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன. தலைமைச் செயலகத்தின் எதிரே அமைந்துள்ள சென்னை துறைமுக வளாகத்தில் இருந்து இந்த வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வழக்கம்போல் தலைமைச் செயலகப் பகுதியில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகமாகக் காணப்பட்டது. தலைமைச் செயலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எனப் பலரும் இப்பகுதியில் திரண்டிருந்தனர். அப்போது, திடீரென காற்றில் ஒருவித அசாதாரணமான மற்றும் கடுமையான நெடி பரவத் தொடங்கியது.
also read : தஞ்சை அருகே சூறாவளியால் லட்சத்திற்கும் அதிகமான வாழைகள் சேதம்: அமைச்சர் ஆய்வு
சிறிது நேரத்திலேயே அந்தப் பகுதி முழுவதும் லேசான புகை மண்டலம் போல் காட்சி அளிக்கத் தொடங்கியது. இந்த வாயுவின் தாக்கம் காரணமாக, அங்கிருந்த பொதுமக்களுக்கு அடுத்தடுத்து உடல்நலப் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. பலருக்குத் தொண்டையில் கடுமையான கரகரப்பு ஏற்பட்டு, தொடர்ந்து இருமல் உண்டானது. ஒரு சிலருக்குக் குமட்டலும், உடல் முழுவதும் கடுமையான எரிச்சலும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. காற்றில் பரவிய நெடியின் தீவிரம் தாங்க முடியாமல், அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள் தங்களது மூக்கு மற்றும் வாயைப் பொத்திக் கொண்டனர். பலர் தங்களின் கைக்குட்டைகள் மற்றும் முகக்கவசங்களைக் கொண்டு முகத்தை மூடியபடி அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றனர்.
“திடீரென ஒருவித நெடி ஏறியது. மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் போல், தொண்டை கரகரவென மாறிவிட்டது. என்ன செய்கிறோம் என்றே தெரியாத அளவிற்கு உடம்பெல்லாம் எரிச்சல் எடுத்தது” என்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்களின் பாதிப்புகள் குறித்துத் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தங்களது தீயணைப்பு வாகனங்களுடன் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். வாயுக்கசிவு துல்லியமாக எந்த இடத்தில் இருந்து வெளியாகிறது என்பதைக் கண்டறிவதற்காக, தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் மூலம் சென்னை துறைமுகப் பகுதியை நோக்கிச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வாயுக்கசிவு ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்தை முதலிலேயே கண்டறிந்தால் மட்டுமே, அதனை விரைவாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு திரண்டிருந்த பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். மேலும், அப்பகுதியில் நிலவும் சூழலை அறிய வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தவர்களையும், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். இருப்பினும், என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பொதுமக்கள் சிலர் தொடர்ந்து அங்கேயே காத்திருந்த சூழலும் காணப்பட்டது.
காற்றில் பரவிய வாயுவின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வந்ததால், அந்தப் பகுதியில் ஒருவித அசாதாரணச் சூழல் நிலவியது. வாயுக்கசிவு ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் மற்றும் அது என்ன வகையான வாயு என்பது குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. துறைமுகப் பகுதியில் இருந்து பரவிய இந்த வாயுக்கசிவை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.







