chennai , May 20 : சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகையைக் கண்காணிக்கும் நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, ஒழுங்கு நடவடிக்கைகளைக் கடுமையாக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிரமான புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பணியாளர்கள் அனைவரும் இனி காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் பயோமெட்ரிக் முறையில் தங்களது வருகையைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசியல் செல்வாக்கு மற்றும் அமைச்சர், மேயர், சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பணிக்கு வராமல் தவிர்த்து வந்த ஊழியர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையாகவும், நிர்வாகக் கட்டுப்பாட்டை முறைப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 12,960 பேர் நிரந்தரப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுடன் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தரவு உள்ளீட்டாளர்கள் உள்ளிட்ட 23,421 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 36,381 பேர் மாநகராட்சியின் கீழ் பணிபுரியும் நிலையில், உயர் அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் இந்த புதிய கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
Also read : கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. 19 காவல் அதிகாரிகள் மாற்றம்
கடந்த சில ஆண்டுகளாகவே மாநகராட்சி அலுவலகங்களில் பணிநேர ஒழுங்கு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்று பொதுமக்கள் தரப்பில் பரவலான புகார்கள் எழுந்து வந்தன. அலுவலக நேரத்தில் பல முக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது இருக்கைகளில் இல்லாததால், பொதுமக்களின் கோப்புகள் தேக்கமடைந்து தாமதமாவதாகவும், மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்கும் சூழல் குறைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. மேலும், சிலர் தங்களின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் வருகைப்பதிவைத் தவிர்த்து வந்ததாகவும் நிர்வாக ரீதியான புகார்கள் எழுந்தன.
இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஏற்கனவே பல மாநகராட்சி அலுவலகங்களில் நிறுவப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் இருந்த பயோமெட்ரிக் கருவிகளை முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தினசரி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கட்டாயமாக வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்குத் தெளிவான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலுவலகப் பணியாளர்கள் மட்டுமின்றி, ஆய்வு மற்றும் திடீர் கண்காணிப்பு போன்ற வெளிப்பணிகளுக்குச் செல்லும் ஃபீல்டு அதிகாரிகளுக்கும் (Field Officers) இதில் தனி நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்கள் தங்களது கைபேசியில் உள்ள பிரத்தியேகச் செயலி (App) மூலமாக வருகையைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது ஊழியரின் தற்போதைய புகைப்படம் மற்றும் அவர்கள் இருக்கும் இடத்தைக் காட்டும் புவிஇருப்பிட (Location) தகவல்களும் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் தலைமை இடமான ரிப்பன் மாளிகையில் இந்த நடைமுறை ஏற்கனவே ஓரளவிற்கு அமலில் இருந்தாலும், இதர மண்டல அலுவலகங்களில் இது முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்ற குறைபாடு இருந்து வந்தது. இந்தச் சூழலில், சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் அண்மையில் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாகச் சீர்திருத்தங்கள் வேகமெடுத்துள்ளன. அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த புதிய பயோமெட்ரிக் நடைமுறையை முழுமையாக அனைத்துப் பிரிவுகளிலும் அமல்படுத்த நிர்வாகத்துறை அதிகாரிகள் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அரசாணை விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாட்டின் மூலம், பணிக்கு வராமல் ஏமாற்றும் ஊழியர்கள் மட்டுமின்றி, காலையில் வந்து ‘இன்-டைம்’ (In-time) பதிவு செய்துவிட்டுச் சில மணி நேரங்களிலேயே அலுவலகத்தை விட்டு வெளியேறும் பணியாளர்களையும் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இனி ‘இன்’ மற்றும் ‘அவுட்’ ஆகிய இரு பதிவுகளும் துல்லியமாகக் கண்காணிக்கப்படும் என்பதால், அலுவலக நேர ஒழுங்கு முறைப்பட்டு, பொதுமக்களுக்கான சேவைகளின் தரம் கணிசமாக உயரும்






