சென்னை , ஜூன் 19 : சென்னை பெரும்பாக்கம் பகுதியில் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் நிர்வாணமாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் சிறுவன் எழுப்பிய அலறல் சத்தத்தை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சிறுவனை மீட்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திடீரென ஒரு சிறுவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் அந்த சத்தம் அக்கம் பக்கத்தினர் இடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஏதோ அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்த பொதுமக்கள், சத்தம் வந்த குறிப்பிட்ட வீட்டின் அருகே சென்று கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் உள்ளிருந்து கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமும் பயமும் வலுத்ததை அடுத்து பொதுமக்கள் உடனடியாக இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
Also : நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள்: 17 பேர் அதிரடி கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூட்டியிருந்த வீட்டின் கதவைத் தட்டிப் பார்த்தனர். அப்போதும் உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறக்க மறுத்ததால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த போலீசார் வீட்டின் கதவை அதிரடியாக உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கு கண்ட காட்சி போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வீட்டில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஆடையின்றி நிர்வாண நிலையில் அழுதுகொண்டே நின்றிருந்தான். அவனது அருகில் பால் தினகரன் என்ற இளைஞர் இருப்பதைக் கண்ட போலீசார், இருவரையும் உடனடியாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த கொடூர சம்பவத்திற்குப் பின்னணியில் ஆன்லைன் விளையாட்டு மோதல் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனும் அவனது நண்பர்களும் ஒரு குழுவாகவும், பால் தினகரன் மற்றும் அவனது நண்பர்கள் மற்றொரு குழுவாகவும் ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த விளையாட்டிற்கு அவர்கள் முற்றிலும் அடிமையாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது இந்த இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சிறுவனின் தரப்பில் இருந்த யாரோ ஒரு நபர் பால் தினகரனின் தாயாரைப் பற்றி மிகவும் அவதூறாகவும் தவறான வார்த்தைகளாலும் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த பால் தினகரன் தனது தாயாரைப் பற்றித் தவறாகப் பேசியது யார் என்பதைக் கண்டறியத் திட்டமிட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுவனைப் பயன்படுத்த முடிவு செய்து அவனைக் கடத்த ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த 15 வயது சிறுவன் தரமணி பகுதிக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பால் தினகரன் மற்றும் அவரது தரப்பினர் அச்சிறுவனைக் கடத்தியுள்ளனர். பின்னர் அவனைக் காரில் ஏற்றி பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொண்டு வந்து அடைத்துள்ளனர். அங்கு சிறுவனைத் தனிமையில் வைத்து “உங்கள் குழுவில் என் அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசியது யார்?” என்று கேட்டுப் பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிச் சித்ரவதை செய்ததோடு மட்டுமில்லாமல் அதனைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இந்தக் கொடூரமான சித்ரவதையைத் தாங்க முடியாமல் அந்த சிறுவன் வலியால் நள்ளிரவில் அலறியுள்ளான். அந்த அலறல் சத்தம் சுவர்களில் எதிரொலித்து வெளியே கேட்டதால்தான், அக்கம் பக்கத்தினர் எச்சரிக்கையாகி போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் சிறுவன் பெரும் ஆபத்திலிருந்து நல்வாய்ப்பாக மீட்கப்பட்டுள்ளான்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து பால் தினகரனைக் கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இந்த வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்ட நபர் சிறுவன் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு மேல் விசாரணைக்காகத் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள கண்ணகி நகர் மகளிர் காவல் நிலையத்திற்கு முறைப்படி மாற்றப்பட்டுள்ளது.





