சென்னை , ஜூன் 16 : தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரனை நேரில் சந்தித்த அவர், தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.

கடந்த இரண்டு நாட்களாக அதிமுக தலைமை மீது சி.விஜயபாஸ்கர் பல்வேறு அதிருப்தியான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.இதன் தொடர்ச்சியாக அவர் இன்று மாலை அல்லது நாளைக்குள் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது.இந்தச் சூழ்நிலையில், இன்று மதியம் அவர் தலைமைச் செயலகத்திற்கு வந்து சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
also : இரண்டு பிளாட்டுகளை சர்வே செய்ய ₹14,000 லஞ்சம்: திருமயம் நில அளவையர் கைது
பொருளாதார நெருக்கடியில் தமிழகம்: வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்
சட்டமன்ற விதிகளின்படி ஒரு உறுப்பினர் தனது பதவியை விலகும்போது, அதற்கான கடிதத்தைத் தனது கைப்பட எழுதி வழங்க வேண்டும் என்பது விதியாகும்.அந்த விதிமுறைகளின்படியே விஜயபாஸ்கர் தனது கடிதத்தை வழங்கியுள்ளார் என்பதைச் சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகச் சட்டப்பேரவைத் தலைவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “சட்டப்பேரவை விதிகள் 21-ன் படி, விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தைத் தனது கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.அந்தப் பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-ன் படி முறையாக அமைந்திருப்பதால், அவரது ராஜினாமாவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று மாலைக்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு இதழில் (கெசட்) வெளியாகவுள்ளது.
சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் தொடர்ந்து பல்வேறு முறைகள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், விரைவில் மாற்றுப் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.அதிமுகவில் இருந்துகொண்டே வேறு கட்சிக்குச் சென்றால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்பதால், அதற்கு முன்னதாகவே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் அவர் மாற்றுத் தளத்தில் தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடங்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது ஐந்தாவதாக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கரும் தனது பதவியைத் துறந்துள்ளார்.








