
திருநெல்வேலி: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஆபாச சைகை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் செல்லும் சாலையில், ரெட்டியார்பட்டி விலக்கு பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. தென் மாவட்டங்களின் முக்கிய அரசு கல்வி நிறுவனமான இங்கு, நெல்லை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்காக கல்லூரி வளாகத்தை ஒட்டி தனித்தனியாக விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
கல்லூரியின் எதிர்புறத்தில், சாலையின் வலது புறமாக நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கியிருக்கும் பெண்கள் விடுதி அமைந்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பைக் கருதி விடுதியைச் சுற்றிலும் உயரமான காம்பவுண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு, வார்டன்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத்தகைய பாதுகாப்பு வளையத்தையும் மீறி நேற்று நள்ளிரவில் அரங்கேறியுள்ள அத்துமீறல், மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
also read : முக்கூடல் அருகே பரபரப்பு: 12 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!
நேற்று இரவு வழக்கம்போல் மாணவிகள் தங்களது அறைகளில் படித்துக்கொண்டிருந்தனர். அப்போது லுங்கி அணிந்த மர்ம வாலிபர் ஒருவர், பெண்கள் விடுதிப் பகுதியைச் சுற்றி சந்தேகப்படும்படியாக நடமாடியுள்ளார். நீண்ட நேரமாக அங்கேயே சுற்றியவர், ஒரு கட்டத்தில் விடுதியின் காம்பவுண்டு சுவர் அருகே நின்றுகொண்டு, தனது செல்போன் மூலம் விடுதி வளாகத்தை வீடியோ எடுத்துள்ளார்.
அதோடு நிற்காமல், எதிர்பாராத நேரத்தில் உயரமான காம்பவுண்டு சுவரை மளமளவென ஏறி குதித்து விடுதி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த மாணவிகளை நோக்கி அநாகரீகமான முறையில் ஆபாச சைகைகளைக் காட்டியுள்ளார். காவலாளிகள் இருக்கும் பகுதியில் நள்ளிரவில் திடீரென அந்நிய நபர் ஒருவன் புகுந்து அத்துமீறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், பயத்தில் கூச்சலிட்டுள்ளனர்.
பெற்றோருக்கு பறந்த அழைப்பு – போலீசார் விரைவு : நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாணவி ஒருவர், உடனடியாக நள்ளிரவிலேயே தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பதறிப்போன பெற்றோர், தாமதிக்காமல் உடனடியாக காவல்துறை அவசர உதவி எண்ணான ‘100’-க்கு அழைத்து விபரத்தைக் கூறியுள்ளனர்.
தகவல் உடனடியாக மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நள்ளிரவு என்றும் பாராமல், இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை தலைமையிலான போலீசார் அதிரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விடுதி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சல்லடை போட்டுத் தேடினர். எனினும், போலீசாரின் வருகையை மோப்பம் பிடித்த அந்த மர்ம நபர், அதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.
இரவில் மர்ம நபர் தப்பியதைத் தொடர்ந்து, இன்று காலை விடுதி மாணவிகள் அனைவரும் திரண்டு சென்று கல்லூரி முதல்வரிடம் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல் குறித்து முறைப்படி புகார் அளித்தனர். கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
முதற்கட்டமாக, கல்லூரி மற்றும் விடுதிப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைவதும், மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்துகொள்வதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, அந்த நபர் யார், உள்ளூர்வாசியா அல்லது வெளியூரைச் சேர்ந்தவரா என்ற கோணத்தில் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை குவிப்பு
பாதுகாப்பு குறைபாடு காரணமாக மாணவிகள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில், இன்று காலை முதலே கல்லூரி மற்றும் விடுதி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழக அரசின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை போலீசாரும், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுதிப் பகுதிகளில் ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசு கல்லூரி விடுதிக்குள்ளேயே நள்ளிரவில் வாலிபர் புகுந்த சம்பவம் நெல்லையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு நேரக் காவல் மற்றும் கண்காணிப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வரும் நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
– Reporter , Nellai













