தமிழக அரசின் மானிய 650ltr மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்கள் சிக்கினர்.. கூத்தங்குழி அருகே போலீஸ் அதிரடி

Nellai Police Bust Kerosene Smuggling Attempt Near Koothankuzhi, 650 Litres of Subsidised Tamil Nadu Government Kerosene Seized While Being Transported to Kerala

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே, தமிழக அரசால் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற இருவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் ரேஷன் பொருட்கள் மற்றும் மானிய விலை மண்ணெண்ணெய் கேரளாவுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பு ஆய்வாளர் துரை தலைமையிலான போலீஸார் நேற்று தீவிர ரோந்து மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால், போலீஸார் காரின் பின்புறமிருந்த அவசரப் பகுதியைச் சோதனையிட்டனர்.

also read : சிவகங்கை கிராபைட் ஆலையில் நேரடி ஆய்வு: வேலைவாய்ப்பு அதிகரிக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

அப்போது காரினுள் ரகசியமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 26 பிளாஸ்டிக் கேன்களில், சுமார் 650 லிட்டர் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து காரை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, நெல்லிக்காய்விளையைச் சேர்ந்த கிரண்ராஜ் (27) என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தமிழக அரசால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக, விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயை, உள்ளூர் மீனவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கியது தெரியவந்தது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணெண்ணெயைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகக் கேரளாவுக்குக் கடத்த முயன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 650 லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெயைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார், கார் ஓட்டுநர் கிரண்ராஜ் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக காரில் உடன் வந்த நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த மோசஸ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இக்கடத்தலின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »