நெல்லை புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! தகவலை மறைத்ததாக 3 காவலர்கள் அதிரடி இடமாற்றம்…

image 468

நெல்லை அருகே வாகன சோதனையின் போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சிறுவர்கள் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் மறைக்க முயன்றதாக, உளவுத்துறை காவலர் உட்பட மூன்று போலீசாரை ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமையன்பட்டி பகுதியில் தற்காலிகப் புறக்காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 18-ஆம் தேதி இரவு, இந்த புறக்காவல் நிலையத்தின் முன்பாக மானூர் உதவி ஆய்வாளர் சஜி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் அதிவேகமாக வந்துள்ளனர். விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணித்த அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், உரிய முறையில் கண்டித்துள்ளனர். மேலும், அந்த இருசக்கர வாகனத்தின் சாவியை பறிமுதல் செய்த போலீசார், “பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வாகனம் ஒப்படைக்கப்படும்” எனக் கூறி சிறுவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Also read: பழிவாங்கும் நடவடிக்கையா? கன்னியாகுமரி ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்

போலீசாரின் இந்த நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்த அச்சிறுவர்கள், காவல்துறையினரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சிறிது நேரத்திலேயே பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்திற்குத் திரும்பியுள்ளனர். யாரும் எதிர்பாராத விதமாக, அந்தப் பெட்ரோல் பாட்டிலில் தீ பற்றவைத்து, புறக்காவல் நிலையத்தின் வடக்குப் பகுதியை நோக்கிக் வீசிவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.

குண்டு வீசப்பட்டவுடன் புறக்காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது அங்கு பணியில் இருந்த மானூர் காவல் நிலைய தலைமை காவலர் சுடலைக்கண்ணு மற்றும் இரண்டாம் நிலை காவலர் ஆனந்தபாண்டியன் ஆகியோர் துரிதமாகச் செயல்பட்டு, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்தோ, சேதமோ தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான மற்றும் சட்டம்-ஒழுங்கு சார்ந்த முக்கியப் பிரச்சினை குறித்து, அங்கு பணியில் இருந்த காவலர்களோ அல்லது அப்பகுதி உளவுத்துறை காவலர் அந்தோணியோ உடனடியாக மாவட்ட உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. துறையின் முக்கியத் தகவல்களை உடனுக்குடன் மேலிடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டிய உளவுப்பிரிவு காவலரும் இச்சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பிய சிறுவர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கடந்த 19-ஆம் தேதி சம்பந்தப்பட்ட மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அதன் பிறகே, மிகவும் தாமதமாக இச்சம்பவம் குறித்து மானூர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிடிபட்ட மூன்று சிறுவர்களும் நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் (சிறார் சீர்திருத்தப் பள்ளி) சேர்க்கப்பட்டனர்.

தப்பியோடிய சிறுவர்கள் பிடிபட்ட பின்னரே, புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. இவ்வளவு பெரிய சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையை தங்களுக்குத் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தது குறித்து உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இச்சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைத்ததாகக் கூறி, தலைமை காவலர் சுடலைக்கண்ணு, இரண்டாம் நிலை காவலர் ஆனந்தபாண்டியன் மற்றும் தனது எல்லைக்குள் நடந்த இந்த முக்கிய நிகழ்வு குறித்து உரிய நேரத்தில் உளவுத் தகவல் சேகரித்து அனுப்பத் தவறிய உளவுப்பிரிவு காவலர் அந்தோணி ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

காவல் நிலையம் மீதே சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவமும், அதனைத் தொடர்ந்து தகவல் மறைப்பு விவகாரத்தில் மூன்று காவலர்கள் அதிரடியாக ஆயுதப்படைக்கு தூக்கியடிக்கப்பட்ட சம்பவமும் நெல்லை மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »