
சென்னை ,மே 19:தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு,அரசுத் தரப்பில் திடீர் அதிரடி ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் எவ்விதத் தங்குதடையுமின்றிச் சென்றடைவதை உறுதி செய்யவும்,விநியோகத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் துறைகளிலும் நிர்வாகச் செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.அதன் தொடர்ச்சியாக,அமைச்சர்கள் தங்களது துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை உடனடியாக நடத்திச் செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும் என முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில்,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணிகள் இப்போது மாநிலம் தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளன.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் சரியான முறையில் கிடைக்கிறதா,எடையில் ஏதேனும் முறைகேடுகள் நடக்கிறதா,கடைகளில் உள்ள மின்னணுத் தராசுகள் துல்லியமாக வேலை செய்கிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த ஆய்வின் போது முதன்மையாகக் கண்காணிக்கப்படுகின்றன.இது தொடர்பாக,தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடை பணியாளர்கள் அனைவரும் பொதுமக்களுக்குப் பொருட்களை வழங்கும் போது மிகுந்த கவனத்துடனும்,விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் எனத் துறை ரீதியாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் கார்டு தாரர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக அதிகாரிகள் நேரடியாகக் களத்தில் இறங்கித் தங்களது கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
ALso read : பக்ரீத் எதிரொலி: நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனை
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்னணுத் தராசுகள் பயன்பாட்டில் உள்ள நிலையில்,அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் குழுக்கள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளன.குறிப்பாக,எடை அளவீட்டில் மக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தவிர்க்கும் வகையில்,”வெயிட் ஸ்கேலிங்” தொழில்நுட்ப அமைப்புகள் துல்லியமாக இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.பொருட்கள் எடை போடப்படும் போது,பணியாளர்கள் பார்க்கும் பகுதி மட்டுமன்றி,பொருட்கள் வாங்கும் பொதுமக்களும் எடையைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் இருபுறமும் டிஸ்ப்ளே அமைப்புகள் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இந்த இருபுற டிஸ்ப்ளேக்கள் பழுதில்லாமல் வேலை செய்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் தனித்தனியாகச் சரிபார்த்து வருகின்றனர்.தராசுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால்,அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனவும்,எடைக் குறைவு தொடர்பான புகார்கள் ஏதும் வராத வண்ணம் நேரடி மேற்பார்வையில் பணியாளர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே எடையைக் காட்சிப்படுத்தும் இந்த நடைமுறை முழுமையாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்புக் குழுக்கள் உறுதி செய்து வருகின்றன.
மறுபுறம்,அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகளும் ஆங்காங்கே உள்ள நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடைகளில் அரிசி,சர்க்கரை,துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதா,விநியோக நடைமுறைகள் முறையாக நடக்கிறதா மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா என்பது குறித்து அவர்கள் கேட்டறிகின்றனர்.அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,பொருட்களைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தக் கூடாது என்றும் கடைப் பணியாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளில் ஏதேனும் முறைகேடுகள்,எடை விவகாரத்தில் முறையற்ற செயல்பாடுகள் அல்லது விநியோகத்தில் அலட்சியப் போக்கு இருப்பது இந்த ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டால்,அதற்குப் பொறுப்பான பணியாளர்கள் மீது மிகக் கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.பணியாளர்கள் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன்,பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது





