
Chennai , May 9 : விஜய்க்கு விசிக ஆதரவு தருமா என்ற கேள்விக்கு மத்தியில், “அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் முடிவு” என விசிக தரப்பில் வெளியான தகவல் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து வரும் சூழலில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான Vijay குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, Thol. Thirumavalavan தலைமையிலான Viduthalai Chiruthaigal Katchi எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கையே ஆவலுடன் காத்திருக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் “தவெக ஆட்சி அமைக்குமா?” என்ற கேள்வி இன்னும் தெளிவான பதிலை பெறாத நிலையில், அதன் அரசியல் விடை தற்போது சென்னை அசோக் நகர் மற்றும் அம்பேத்கர் திடலை மையமாகக் கொண்டு நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.விசிக செய்தித் தொடர்பாளர் பாவலன் அளித்த பேட்டியில், “நாட்டு நலன் கருதி அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் கட்சியின் முடிவு இருக்கும்” என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read : விஜய்க்கு ஆட்சி அமைக்க VCK ஆதரவா? நாளை திருமாவளவன் அறிவிப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு உச்சம்!
அவரின் இந்த ஒரு வரியே தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் விவாதங்களிலும் முக்கிய ‘கீவேர்டு’ ஆக மாறியுள்ளது. மேலும், “எந்த முடிவாக இருந்தாலும் அதை அறிவிக்கும் அதிகாரம் தலைவர் திருமாவளவனுக்கே உயர்நிலை குழு வழங்கியுள்ளது” என அவர் தெரிவித்தது, கட்சிக்குள் ஏற்கனவே ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அரசியல் வாசிப்பை உருவாக்கியுள்ளது.
அம்பேத்கர் திடலில் வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டிருந்தது மேலும் சந்தேகங்களை கிளப்பியது. இதையடுத்து, “விஜய் அங்கு வர வாய்ப்பு இருக்கிறதா?” என்ற கேள்வி நேரடியாக எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த பாவலன், “இதுவரை அப்படியான தகவல் இல்லை. நேற்று விஜய் எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் தலைவர் வேறு இடத்தில் இருந்ததால் வர வேண்டாம் என்று கூறிவிட்டோம்” என்றார்.
இந்த தகவல் வெளியாகியவுடன், விஜய் மற்றும் விசிக இடையே அரசியல் தொடர்புகள் தீவிரமடைந்துள்ளதா என்ற கேள்வி மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த சூழல் அரசியல் ஆர்வலர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக இடதுசாரி கட்சிகளுடனான உறவு பார்க்கப்படுகிறது. “விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து செயல்படும்” என்ற கருத்தை பாவலன் மீண்டும் உறுதிப்படுத்தினார். “கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது” என்ற அவரது விளக்கம், இடதுசாரி கூட்டணியில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என்பதையும் வெளிப்படுத்துகிறது.





