மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த வழக்கில் தர்பூசணிக்குள் எலி மருந்து செலுத்தப்பட்டதாக தடயவியல் அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள தடயவியல் அறிக்கை இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் சாதாரண Food Poisoning என கருதப்பட்ட இந்த சம்பவம் தற்போது திட்டமிட்ட விஷ கலப்பு மற்றும் கொலை கோணத்தில் விசாரிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் தர்பூசணி பழத்தையும் உட்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மறுநாள் காலை அந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அனைவரும் உயிரிழந்தனர்.
ஆரம்ப விசாரணையில் ஏற்பட்ட சந்தேகங்கள்
இந்த சம்பவம் ஆரம்பத்தில் சாதாரண உணவு நச்சுத்தன்மை காரணமாக ஏற்பட்ட மரணம் என கருதப்பட்டது. ஆனால் உயிரிழந்தவர்களின் உடல்திசுக்கள் மற்றும் உள் உறுப்புகள் விசித்திரமான முறையில் பச்சை நிறமாக மாறியிருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இது உடலுக்குள் மிக வீரியமான நச்சு பரவியிருப்பதற்கான முக்கிய அறிகுறியாக கருதப்பட்டது.
இதையடுத்து மும்பை போலீசார் மற்றும் மகாராஷ்டிரா Food and Drug Administration அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணையை தொடங்கினர். குடும்பத்தினர் பயன்படுத்திய உணவுப்பொருட்கள், மருந்துகள் மற்றும் குடும்ப பின்னணி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தர்பூசணிக்குள் ஊசி மூலம் விஷம்?
இந்த வழக்கில் தற்போது வெளியாகியுள்ள தடயவியல் பரிசோதனை அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, குடும்பத்தினர் சாப்பிட்ட தர்பூசணி பழத்திற்குள் ஊசி மூலம் எலி மருந்து செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தர்பூசணிக்குள் நேரடியாக விஷம் புகுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், இது திட்டமிட்ட செயலா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக அந்த பழம் வாங்கப்பட்ட கடை, பழம் விநியோகிக்கப்பட்ட முறை, விஷம் செலுத்தப்பட்ட நேரம் உள்ளிட்ட அம்சங்களை மையமாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிரியாணி முதல் மசாலா வரை 11 மாதிரிகள் சோதனை
உயிரிழந்தவர்களின் வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட பிரியாணி, தர்பூசணி, குடிநீர், பச்சரிசி, சமைத்த சோறு, கோழி இறைச்சி, பேரிச்சம்பழம் மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 11 மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.
ஆனால் இந்த உணவுப்பொருட்களில் எதிலும் உயிருக்கு ஆபத்தான வேதி பொருட்களோ அல்லது நச்சு கலப்புகளோ இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சந்தேகம் முழுமையாக தர்பூசணி பழத்தின் மீதே திரும்பியுள்ளது.
கொலை வழக்காக மாறுமா?
முதலில் Food Poisoning வழக்காக கருதப்பட்ட இந்த சம்பவம் தற்போது Murder Investigation ஆக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தர்பூசணியில் விஷம் செலுத்தியது யார்? குடும்பத்தை குறிவைத்து செய்யப்பட்ட திட்டமிட்ட கொலையா? அல்லது சந்தையில் விற்கப்படும் போதே விஷம் கலக்கப்பட்டதா? என்ற கேள்விகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் மும்பை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு குறித்து புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.






