
Chennai , May 8 : பெரும்பான்மை இல்லாத சூழலில் சட்ட வல்லுனர்களுடன் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார். தவெக 108 MLA-க்கள் ராஜினாமா விவகாரம் அரசியலில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் தற்போது ஆட்சி அமைக்கும் கணக்கில் சிக்கலில் மாட்டியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களில் இன்னும் சில இடங்கள் குறைவாக இருப்பதால், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தவெக தலைவர் Vijay சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் தவெகவுக்கு தற்போது 113 MLA-க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆட்சியை அமைக்க இன்னும் ஐந்து இடங்கள் தேவைப்படும் சூழல் நிலவுகிறது.
Also Read : விஜய் தலைமையில் ஆட்சி அமையுமா? இடதுசாரிகளுடன் ரகசிய பேச்சு தீவிரம்.. பனையூரில் TVK எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
ஆளுநர் முடிவை எதிர்நோக்கும் தவெக
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரி விஜய் தரப்பு ஏற்கனவே ஆளுநரை இரண்டு முறை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால் ஆளுநர் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தான் கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளுடனும், சட்டமன்ற உறுப்பினர்களுடனும் விஜய் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நீலாங்கரை இல்லத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக்குப் பிறகு, பணையூர் அலுவலகத்திலும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்திய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஆட்சி அமைப்பதில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டால், தவெகவின் 108 MLA-க்களும் ராஜினாமா செய்வதற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இணைந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு குறித்த பேச்சுகள் பரவி வரும் நிலையில், அதனை எப்படி அரசியல் ரீதியாக எதிர்கொள்வது என்பதே தற்போதைய ஆலோசனையின் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரிய விஜய்
பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டுவதற்காக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கடிதத்தை தவெக தலைவர் அனுப்பியுள்ளதாகவும், அதுகுறித்து கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று மாலைக்குள் இதுகுறித்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இதனால் தமிழக அரசியல் அடுத்த சில மணி நேரங்களில் மேலும் பரபரப்பாக மாறக்கூடும் என கணிக்கப்படுகிறது.
நாளையே பதவியேற்பு? தவெக தொண்டர்களில் நம்பிக்கை
தவெக தரப்பில் நாளையே விஜய் ஆட்சி அமைப்பார் என்ற நம்பிக்கை இன்னும் நீடித்து வருகிறது. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பான்மை ஆதரவை இறுதி நேரத்தில் பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இதனால்தான் விஜய் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். மாநில நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்ட வல்லுனர்கள் என தொடர்ந்து நடைபெறும் சந்திப்புகள், தமிழக அரசியலில் அடுத்த கட்ட அதிரடி நகர்வுகளுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றன.





