நெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
கடந்த ஜூலை 2ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, தனது இரண்டு மகன்களான ஜெயராஜ் மற்றும் சின்னதுரை ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இவர்களைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது.
Also : நெல்லை சந்திப்பில் டெலிவரி ஊழியரின் பைக் திருட்டு: போலீசார் விசாரணை
காரின் வேகத்தில் நிலைகுலைந்து மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் மீண்டு எழுவதற்குள் காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் காளிமுத்து மற்றும் அவரது மகன்களை நோக்கி கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. இந்தத் திடீர் தடியடி மற்றும் வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த காளிமுத்து மற்றும் ஜெயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தப்பிய மற்றொரு மகன் சின்னதுரை, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னதுரை அளித்த புகாரின் அடிப்படையில், வீரவநல்லூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிரப் புலன் விசாரணையைத் தொடங்கினர்.
நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று முக்கிய எதிரிகளைப் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (29), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்ற கொக்கி குமார் (23) மற்றும் ஊர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொடூரக் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள மூவரைத் தவிர, மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மீதமுள்ள எதிரிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்குச் சென்று தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வீரவநல்லூர் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கப் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.





