UP , June 25: உத்தரப் பிரதேச மாநிலத்தில் குவாட் பைக்கை ஓட்டும் நபர் போல 11,000 வோல்ட் உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது மதுபோதையில் ஏறி வாலிபர் ஒருவர் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த விசித்திரமான மற்றும் அபாயகரமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அங்குள்ள 11,000 வோல்ட் மின்சாரக் கம்பத்தில் மளமளவென்று ஏறியுள்ளார். கம்பத்தின் உச்சிக்குச் சென்றவர் அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு இடையே மிக சாதாரணமாக படுக்கையில் படுப்பது போல மல்லாக்கப் படுத்து உறங்கத் தொடங்கியுள்ளார்.
also : முதல்வரின் குட்டி கதை: “அரசியல் பேச சட்டசபைதான் சிறந்த இடம்” – நிர்மலா சீதாராமன் விளக்கம்
மின் கம்பத்தில் ஏதோ ஒரு உருவம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திரண்டு பார்த்தபோதுதான் அது ஒரு மனிதன் என்பது தெரியவந்தது. மின்சாரக் கம்பிகளில் லேசான அசைவு ஏற்பட்டிருந்தாலும் அந்த வாலிபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழக்கும் மிக ஆபத்தான சூழல் நிலவியது. எனினும் கீழிருந்த பொதுமக்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக உள்ளூர் மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்து அந்தப் பகுதிக்கான மின் விநியோகத்தை துண்டிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
பொதுமக்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டித்தனர். இதன் காரணமாகவே அந்த நபர் மின்சாரம் பாயாமல் உயிர் தப்பினார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மின் கம்பத்தில் ஆபத்தான நிலையில் படுத்திருந்த நபரை மிகவும் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
கீழே இறக்கப்பட்ட அவரிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததும் போதையின் உச்சத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் மின் கம்பத்தின் மீது ஏறி படுத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நபருக்கு கடுமையான அறிவுரைகளை வழங்கிய காவல்துறையினர் இனிமேல் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அவருடைய பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
பொதுமக்களின் சமயோசித புத்தியாலும் மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டதாலும் மட்டுமே இந்த நபர் இன்று உயிரோடு இருக்கிறார் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்





