சென்னை , ஜூன் 24 : கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு முக்கியத் திட்டத்தில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. ஜெர்மனி வங்கியின் நிதி உதவியுடன் 500 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக முந்தைய திமுக அரசால் கோரப்பட்டிருந்த டெண்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியின் திட்டப்படி இந்த 500 மின்சார பேருந்துகளையும் அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருந்தது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைத்து அவற்றைப் பராமரிப்பது மற்றும் இதர இயக்கச் செலவுகளைத் தனியாரே கவனித்துக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நடைமுறையானது அரசுக்குக் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தற்போதைய போக்குவரத்துத் துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சேலம் காவல் நிலையத்தில் நள்ளிரவு மாந்திரீக பூஜையா? சுவர் முழுவதும் ரத்தம் பூசப்பட்டதால் பரபரப்பு
TN மின்வாரியத்தில் ஒரே ஆண்டில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்
இதன் காரணமாகவே முந்தைய டெண்டர் ரத்து செய்யப்பட்டு ஒட்டுமொத்த திட்டத்தின் வடிவமும் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய மாற்றத்தின்படி இனிவரும் காலங்களில் ஒப்பந்தம் பெறக்கூடிய தனியார் நிறுவனங்களே தங்களது சொந்த நிதியில் மின்சார பேருந்துகளை வாங்க வேண்டும். அந்தப் பேருந்துகளை இயக்குவது பழுதுபார்ப்பது மற்றும் பராமரிப்பது உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் அந்த நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குப் பதிலாக பேருந்துகளை இயக்குவதற்காக அரசுக்கு ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு என நிர்ணயிக்கப்படும் நிலையான கட்டணத்தை மட்டுமே அத்தனிியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளது.
அதே வேளையில் இந்த மின்சார பேருந்துகளில் பயணிகளுக்கான பயணக் கட்டணத்தை அரசு என்ன நிர்ணயம் செய்கிறதோ அந்தத் தொகையை மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என்பதும் புதிய விதிமுறையாக சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் புதிய மின்சார பேருந்துகளை நேரடியாக வாங்குவதற்கும், அவற்றுக்கான நடத்துனர்களை (கண்டக்டர்கள்) நியமிப்பதற்கும் மற்றும் தொடர் பராமரிப்புச் செலவுகளை முழுமையாக ஏற்பதற்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் போதிய நிதி வசதி இல்லை. இதனால் அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டும் திட்டத்தை லாபகரமாக மாற்றியமைக்கும் நோக்கிலுமே இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு புதிய முறைக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.





