சென்னை , June 23 : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் , வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக ன வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி வரும் ஜூன் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஜூன் 27-ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் மேலும் அதிகரித்து, கூடுதல் மாவட்டங்களுக்கு விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.
ALso : TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு: 26 பணியிடங்களுக்கு ஜூன் 30 முதல் விண்ணப்பம்
இதே நிலை நீடித்து ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் மேற்குறிப்பிட்ட மலை மாவட்டங்களுடன் விருதுநகர் மாவட்டத்திலும் கனமழை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஜூன் இறுதி வாரத்தில் பருவமழை சாதகமாக மாறுவதால் இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் இயல்பை விட கூடுதல் மழைப்பொழிவு கிடைக்கப் பெறலாம் .
அதே நேரத்தில், தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாலும் பகல் நேர வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையானது 38 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. ஜூன் 27-ஆம் தேதி வரை ஒட்டுமொத்த தமிழகத்திலும் வெப்பநிலை பெருமளவில் இயல்பு நிலையை ஒட்டியே நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல் அரபிக்கடல் பகுதி, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் வரும் ஜூன் 29-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.





