சினிமா செய்தி , ஜூன் 23: திரையுலகில் இருந்து அரசியல் களத்திற்கு நகர்ந்து இன்று தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய் குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல் ஒன்றை இயக்குநர் பேரரசு பகிர்ந்துள்ளார். தொடக்க காலத்தில் இருந்தே மக்கள் மற்றும் ரசிகர்களுடன் விஜய் பேணி வந்த நெருக்கமான உறவே அவரை இன்று இந்த உயரிய நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயக்குநர் பேரரசு மற்றும் முதலமைச்சர் விஜய் கூட்டணியில் உருவான ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை. விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த இந்த வணிகரீதியான திரைப்படங்களை இயக்கியவர் என்ற முறையில் விஜய்யின் ஆரம்பகால செயல்பாடுகள் மற்றும் அவரது கொள்கைகள் குறித்து பேரரசு அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.
விஜய்யுடன் படம் பண்ணுவதற்காக கதையைக் கூறி அவர் ஓகே செய்த பிறகு கால்ஷீட் கொடுக்கும் நேரத்தில் மிக முக்கியமான மூன்று நிபந்தனைகளை அவர் விதிப்பார் என்று பேரரசு தெரிவித்துள்ளார். அந்த மூன்று நிபந்தனைகளும் படப்பிடிப்பின் ஒழுங்குமுறை மற்றும் அவரது தனிப்பட்ட கொள்கை சார்ந்தவை என்று அவர் விளக்கியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு: கடைசி வரை நிறைவேறாமலே போன ஆசை – நடிகர் ஆனந்தராஜ்
விஜய் விதிக்கும் முதல் நிபந்தனை, ஞாயிற்றுக்கிழமைகளில் எக்காரணம் கொண்டும் படப்பிடிப்பு வைக்கக்கூடாது என்பதுதான். வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அல்லது தனிப்பட்ட பணிகளுக்காக அவர் அதை ஒதுக்குவார். இரண்டாவது நிபந்தனை, பகல் நேரப் படப்பிடிப்பாக இருந்தால் மாலை 6 மணிக்கு மேல் அதனை நீட்டிக்கக் கூடாது. ஒருவேளை இரவு நேரப் படப்பிடிப்பாக (நைட் ஷூட்) இருந்தால், அதற்கு அடுத்த நாள் பகலில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. பகல் அல்லது இரவு என ஏதாவது ஒரு ஷிப்ட்டில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பார் என்று பேரரசு கூறியுள்ளார்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் தாண்டி விஜய் விதிக்கும் மூன்றாவது நிபந்தனைதான் அவரை இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்ததற்கான மிக முக்கியக் காரணி என்று பேரரசு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் விதிக்கும் அந்த மூன்றாவது நிபந்தனை, அவரது பிறந்தநாள் அன்று எக்காரணம் கொண்டும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்பதுதான். அந்த நாளை அவர் முற்றிலும் தனது ரசிகர்களுக்காக மட்டுமே ஒதுக்குவார். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தனை வருடங்களாகத் தனது பிறந்தநாளைத் திரைப்படப் பணிகளில் கழிக்காமல் தொடர்ந்து ரசிகர்களைத் தேடிச் சென்று சந்தித்து அவர்கள் மீது காட்டிய அன்பும், அவசியமான நேரத்தில் அவர்களுக்குச் செய்த நலத்திட்ட உதவிகளும்தான் இன்று அவரை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக மாற்றி சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறது என்று பேரரசு அந்தப் பேட்டியில் உடைத்துப் பேசியுள்ளார்.





