பாட்னா , ஜூன் 22: நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத முயன்ற பெரும் மோசடி கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளில் ஈடுபட்ட பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் 30 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்கிசராய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேரணா விடுத்துள்ள அறிக்கையின்படி, அப்பகுதியில் உள்ள மூன்று பள்ளி தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 30 பேரின் விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வகையில் உண்மையான மாணவர்களுக்கு பதிலாக தேர்வெழுத வந்த ஒன்பது போலி நபர்கள் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் 18 பேர், உண்மையான தேர்வு மாணவர் ஒருவர் உதவியாளர்கள் இரண்டு பேர் என மொத்தம் 30 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
also : NEET தேர்வு பயத்தால் தருமபுரியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
NEET தேர்வு குளறுபடி: மகாராஷ்டிர மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மொபைல் போன்கள் மற்றும் போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி இந்த மோசடி நெட்வொர்க்கின் பின்னணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முக்கிய சூத்திரதாரிகளாகச் செயல்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள கயாவில் உள்ள ஏ.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவரான அர்பத்ராஜ், ஏற்கனவே 2024 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ அமைப்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவர்கள்தான் மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் பணம் கொடுத்து தேர்வு வினாக்களுக்குப் பதிலளிக்கும் சால்வர்களாவும் ஆள்மாறாட்டம் செய்பவர்களாகவும் பயன்படுத்தியுள்ளனர். ஹாஜிபூரைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மருத்துவ மாணவரான மயங்க் காஷப் என்பவர் ஹசன்பூர் தேர்வு மையத்தில் உள்ள பயோமெட்ரிக் நிறுவன ஊழியர் அங்கித்குமார் என்பவருடன் கூட்டு சேர்ந்துள்ளார். பயோமெட்ரிக் ஊழியரின் உதவியோடு மயங்க் காஷப் தானும் அந்த நிறுவனத்தின் ஊழியர் போல போலி அடையாளத்துடன் தேர்வு மையத்திற்குள் நுழைந்துள்ளார். பின்னர் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையைத் தங்களுக்கு சாதகமாக முறியடித்து உண்மையான மாணவர்களுக்குப் பதிலாக போலி நபர்களைத் தேர்வெழுத அனுமதித்துள்ளனர்.
இது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சிவம்குமார் கூறுகையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற வைப்பதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டுள்ளது என்றார். இதில் முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை வாங்கப்பட்டுள்ளது என்றும் மீதி தொகையைத் தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பிறகு தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வங்கி கணக்குகள், மொபைல் அழைப்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே 12 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்டு நேற்று நாடு முழுவதும் 5,454 மையங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மறுதேர்வு எழுதிய நிலையில் மீண்டும் பீகாரில் இத்தகைய மோசடி கும்பல் பிடிபட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





