சிவகங்கை ,ஜூன் 19 : சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் ,தொடர் மழையின் காரணமாகச் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் ,சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ,இன்று பிற்பகல் முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை வேளையில் திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியதுடன் ,இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டத் தொடங்கியது.
குறிப்பாகச் சிவகங்கை நகர் ,மதகுபட்டி ,ஒக்கூர் ,காளையார் கோவில் ,கொல்லங்குடி ,முத்துப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெருமழை நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் ஆங்காங்கே போக்குவரத்துச் சற்றுப் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் எஞ்சிய பல பகுதிகளிலும் தற்போது வரை வானம் இருண்டு ,மழை பெய்வதற்கான சாதகமான சூழல் நீடித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்: நிதி நிறுவன ஊழியர் கைது
இந்த ஆனி மாதத் தொடக்கத்தில் பெய்து வரும் கனமழை ,மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பெரிதும் உதவும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் ,தற்போதைய தென்மேற்கு பருவமழை விவசாயப் பணிகளுக்கு மிகவும் உகந்தது என்பதால் ,உழவு மற்றும் விதைப்புப் பணிகளைத் தொடங்கக் காத்திருந்த சிவகங்கை மாவட்ட விவசாயிகள் இந்த மழையை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.
மறுபுறம் ,இந்தத் தொடர் மழை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்துச் சாலையோர வியாபாரிகளுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. சிவகங்கை மற்றும் அதன் முக்கிய சந்திப்புகளில் தள்ளுவண்டிகள் மற்றும் தற்காலிகக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் சிறு வணிகர்கள் ,கடந்த இரண்டு நாட்களாகக் கடைகளை விரித்து வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மாலை நேர வியாபாரத்தை மட்டுமே நம்பியுள்ள இவர்களின் வாழ்வாதாரம் இந்த திடீர் மழையால் முடங்கியுள்ளது.
.





