
நெல்லை , ஜூன் 16 : நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தில் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் சகோதரர் சப்பாணி மாடசாமி கோவில் முன்பாக ஒரு கும்பலால் கழுத்து நெரிக்கப்பட்டும் அறிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேரை சுத்தமல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். 55 வயதான இவர் மரங்களை வெட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் இவர் மேலக்கல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரியப்பனின் சகோதரர் ஆவார். சண்முகவேல் சம்பவத்தன்று சுத்தமல்லி – சேரன்மகாதேவி சாலையில் அமைந்துள்ள சப்பாணி மாடசாமி கோவிலுக்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அவர் கோவில் அருகே சென்றபோது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் சண்முகவேலை வழிமறித்துள்ளது. அறிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரைச் சுற்றி வளைத்த அந்த கும்பல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அக்கும்பல் தாங்கள் வைத்திருந்த துண்டால் சண்முகவேலின் கழுத்தை இறுக்கியுள்ளது. பின்னர் தப்பியோட முயன்ற அவரை அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்கள் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த சண்முகவேலை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சண்முகவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலைச் செய்தி பரவியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சண்முகவேலின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுத்தமல்லி போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணையைத் தொடங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இக்கொலைக்கான பின்னணி மற்றும் மோட்டிவ் தெரியவந்தது.
மேலக்கல்லூர் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவின் போது சாமி ஆடுவதில் யாருக்கு முதல் மரியாதை மற்றும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கோவிலில் யாருடைய கை ஓங்கியிருக்க வேண்டும் என்பது குறித்தும் சண்முகவேல் தரப்பிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பிற்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலே இரு தரப்பிற்கும் இடையேயான முன்விரோதத்தின் ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாய்வார்த்தை முற்றி மற்றும் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்தச் சூழலில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் இரு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர். அங்கு கேக் வெட்டும் நேரத்தில் மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது பிரிவினர் இடையேயான மோதலாக வெடித்தது. அந்த மோதலின் போது சண்முகவேல் தரப்பினர் எதிர்தரப்பைச் சேர்ந்த நான்கு பேரை அறிவாளால் வெட்டியுள்ளனர்.
also : நாஞ்சில் விஜயன் மீது பெண் பரபரப்பு புகார்: “வீடியோவை வைத்து Blackmail செய்கிறார்” என குற்றச்சாட்டு!
எம்.எல்.ஏ.க்களுக்கான இருநாள் புத்தாக்க பயிற்சி: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
அறிவாள் வெட்டில் படுகாயமடைந்த அந்த நான்கு பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த மோதலில் காயங்கள் ஆறினாலும் சண்முகவேல் தரப்பினர் மீது எதிர்தரப்பிற்கு இருந்த ஆத்திரமும் பகையும் குறையவில்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தங்கள் மீது நடத்தப்பட்ட அறிவாள் வெட்டுச் சம்பவத்திற்குப் பழிக்குப்பழியாகவே தற்போது சண்முகவேல் கோவில் முன்பாக வழிமறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இக்கொலையில் தொடர்புடைய மேலக்கல்லூரைச் சேர்ந்த ஐயப்பன் (21) ,சிவசங்கரன் (26) ,மாரிச்செல்வம் (21) ,நெட்டூர் பகுதியைச் சேர்ந்த இசைக்கிமுத்து என்ற கொடிமுத்து (27) மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் ஆகிய ஐந்து பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இக்கொலைச் சம்பவத்தின் முழு பின்னணி குறித்தும் வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த மேலக்கல்லூர் கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் ஏற்கனவே இரு தரப்பிற்கும் இடையே தொடர் மோதல்கள் நடந்து வருவதால் மீண்டும் சண்டை ஏற்பட்டு வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதைக் கண்காணிக்கும் வகையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








