சென்னை, june 8: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது.

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் மக்களின் நலன் சார்ந்த மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் மிக முக்கியமானது பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கான ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டமாகும். பல்வேறு காரணங்களால் இருமுறை தள்ளிப்போன இந்தத் திட்டத்தின் தொடக்க விழா தற்போது நாளை மாலை இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் படையை வழிநடத்தி திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்காக ஐஜி பவானீஸ்வரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுப்பதே இந்த அதிரடிப்படையின் முதன்மை நோக்கமாகும். குறிப்பாக, பொதுவெளிகளிலும், இணைய வழியிலும் (சைபர் கிரைம்) பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களைக் கண்டறிந்து தடுத்தல், அவர்களுக்குத் தேவையான அவசரகால உடனடி உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளில் இப்படையினர் தீவிரமாக ஈடுபடவுள்ளனர்.
கவின் ஆணவக்கொலை வழக்கு: தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு
தமிழக முதல்வர் படம் கீழ் அமர மறுத்தாரா? நெல்லை மேயர் அறையில் திடீர் இருக்கை மாற்றம்!
மேலும் நகரின் எந்தெந்தப் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது என்பது கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை இந்தச் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை நடைபெறும் விழாவில் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் ஜோசப் விஜய் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படவுள்ள பிரத்தியேக வாகனங்கள் அனைத்தும் தற்பொழுது மைதானத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் பெண் காவலர் ஒருவரின் உருவமும் அதனுடன் சிங்கம் கர்ஜிப்பது போன்ற லோகோவும் (இலச்சினை) வடிவமைக்கப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பில் மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இத்திட்டத்தின் தொடக்க விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.








