சென்னை , ஜூன் 2: தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.பணிநீட்டிப்பில் தொடர்ந்து வந்த அவர் தனது விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேரில் வழங்கியுள்ளார்.தமிழக அரசியல் சூழலில் பல்வேறு முக்கிய நகர்வுகள் அரங்கேறி வரும் வேளையில் சட்டப்பேரவை செயலாளரின் இந்த திடீர் முடிவு தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டப்பேரவை செயலாளராக நீண்ட அனுபவம் கொண்ட சீனிவாசன் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.எனினும் அவருடைய நிர்வாகத் திறமை மற்றும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.அதனடிப்படையில் 2023 டிசம்பர் முதல் அவர் பணிநீட்டிப்பில் சட்டப்பேரவை செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.அண்மையில் கடந்த மே 13ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற தருணத்திலும் சீனிவாசன் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த இக்கட்டான சூழலில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சட்ட விதிகளின்படியான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் தீவிர கவனம் செலுத்தி சபாநாயகருக்கு முழு உறுதுணையாகச் செயல்பட்டார்.
Also read : தலைமைச் செயலகம் அருகே திடீர் வாயுக்கசிவு: சென்னை துறைமுகப் பகுதியில் மக்கள் மூச்சுத் திணறல்
தமிழக சட்டப்பேரவையைப் பொறுத்தவரை அவையின் செயலாளர் பதவி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருதரப்பிலும் பல்வேறு விவாதங்கள் காரசாரமான கேள்விகள் எழும்போது சபாநாயகருக்குத் தேவையான அனைத்து விதிமுறைகளையும் தகவல்களையும் முன்கூட்டியே எடுத்துரைப்பது செயலாளரின் முக்கியப் பணியாகும்.அவையில் வாக்குவாதங்கள் முற்றி அசாதாரண சூழல் நிலவும்போது அவையை எவ்வாறு விதிகளின்படி கையாள வேண்டும் என்று சபாநாயகருக்கு ஆலோசனைகளை வழங்கி உடனுக்குடன் முடிவெடுக்கவும் தீர்ப்புகளை வழங்கவும் செயலாளர் பக்கபலமாக இருந்து வருகிறார்.
சீனிவாசனின் இந்த ராஜினாமா முக்கியத்துவம் பெறக் காரணம் அவர் அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் சட்டப்பேரவை செயலாளராகப் பணியாற்றிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பதால் தான், அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் அவையில் பெரும்பான்மையை நிரூபித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்திலும் சட்டப்பேரவை செயலாளராக இவருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.பேரவைச் செயலகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எந்தவொரு சட்ட விளக்கம் அல்லது தகவல் கேட்டாலும் அதனை விதிகளின்படி உடனுக்குடன் பகிர்ந்தளித்து-நடுநிலையான முறையில் அனைத்துக் கட்சிகளுக்கும் உதவக்கூடிய அதிகாரியாக அவர் செயல்பட்டு வந்தார்.
தலைமைச் செயலக வட்டாரத்தில் இந்த ராஜினாமா தற்போதைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது.அஇஅதிமுகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அண்மையில் ஏற்றுக்கொண்டார்.இதற்கு முன் அஇஅதிமுகவின் இரு தரப்பினரும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பாக மாறி மாறி பல்வேறு கடிதங்களை அளிப்பதும் பின்னர் திரும்பப் பெறுவதுமாக இருந்தனர்.மேலும் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை குறித்தும் சபாநாயகர் இறுதி முடிவெடுக்க வேண்டிய அரசியல் சூழல் நிலவி வருகிறது.இத்தகைய ஒரு பரபரப்பான மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது பணிநீட்டிப்பில் இருந்து விலகி பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியல் மற்றும் அதிகாரத்துவ வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.







