புதுக்கோட்டை, மே 28 : அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் புதிய திருப்பத்தை எட்டியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி தரப்பு மீண்டும் கரம் கோர்த்துள்ள சூழலில், விஜயபாஸ்கரின் இந்த நகர்வு தமிழக அரசியலில் உற்று நோக்கப் படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கி இரு அணிகளாகச் செயல்படும் நிலை உருவானது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் செயல்பட்டு வந்தார். இந்த அணியினர் சட்டப்பேரவைத் தலைவரிடம் (சபாநாயகர்) அளித்த கடிதத்தில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியும், துணைத் தலைவராக சி.விஜயபாஸ்கரும் செயல்படுவார்கள் என்று முறைப்படி மனு அளித்திருந்தனர்.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, நேற்று அதிமுகவில் திடீர் திருப்பமாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து, எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை அவர்கள் முறைப்படி அளித்தனர். மீண்டும் தங்களை எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிகாரப்பூர்வ அணியில் இணைத்துக் கொள்வதாக அவர்கள் அறிவித்தனர்.
Also read : அதிமுகவுக்கு அதிர்ச்சி: அண்ணா தொழிற்சங்க செயலர் கமலக்கண்ணன் தவெகவில் இணைவு
இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைச் செயலகத்திற்குச் சென்ற எஸ்.பி.வேலுமணி தரப்பினர், பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்து, முந்தைய கடிதங்களைத் திரும்பப் பெறுவதாகக் கடிதம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, தங்களுக்குள் இருந்த அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் முழுமையாகக் கலைந்துவிட்டதாகத் தெரிவித்தார். தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாகப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தங்களுக்குப் பேரவை முன்னிலையில் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், நேற்று எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தபோது, டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களுடன் வரவில்லை. நேற்று நடைபெற்ற எந்தவொரு சமரச நிகழ்வுகளிலும், பேரவைத் தலைவர் சந்திப்பிலும் விஜயபாஸ்கர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலையே அவர் புதுக்கோட்டைக்குத் திரும்பியிருந்தார்.
அதிமுகவில் இரு பிரிவுகளாகச் செயல்படத் தொடங்கிய காலகட்டத்திலேயே, அதிருப்தி அணியில் இருந்தவர்களின் கட்சிப் பதவிகள் அனைத்தையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்து உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியும், அதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் பதவியும் சி.விஜயபாஸ்கரிடம் இருந்து பறிக்கப்பட்டன.
தற்போது எஸ்.பி.வேலுமணி தரப்பு மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்ட நிலையில், தனியாக விடப்பட்டுள்ள சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் உள்ள தனது இல்லத்தில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களைத் திரட்டி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இழந்த கட்சிப் பதவிகளை மீட்பதா அல்லது தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. வேலுமணியின் சமரச முடிவைத் தொடர்ந்து, விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் அரசியல் நகர்வுகள் அமையும் என்பதால், புதுக்கோட்டை ஆலோசனைக் கூட்டம் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.








