விருதுநகர் ,ஜூன் 17: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு கருந்திரி தயாரிப்பு கூடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ,அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல முடியாமல் ,நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் உறவினர்கள் செய்வதறியாது தவித்து வரும் சூழல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகே மாஞ்சோலை காலனிக்கு பின்புறம் கால்நடை வளர்ப்பு கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கூடத்தை சிவகாசியைச் சேர்ந்த அஜித் என்பவர் குத்தகைக்கு எடுத்து ,அதன் ஒரு பகுதியில் பல மாதங்களாக உரிய அனுமதியின்றி பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரியை சட்டவிரோதமாக தயாரித்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த ஜூன் 10-ஆம் தேதி வழக்கம் போல் தொழிலாளர்கள் இங்கு கருந்திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொட்டகையின் மற்றொரு புறத்தில் வெல்டிங் வேலை நடைபெற்று வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக வெல்டிங் இயந்திரத்தில் இருந்து பறந்த தீப்பொறி ,அருகில் இருந்த கருந்திரிகள் மீது விழுந்ததில் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நொடிப் பொழுதில் கொட்டகை முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சாவித்திரி கோஸ் (50) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவருடன் பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் (45) என்பவர் 80 சதவீத தீக்காயங்களுடனும் ,அழகு நம்பி (19) என்பவர் 40 சதவீத தீக்காயங்களுடனும் மீட்கப்பட்டனர். இவர்களுடன் வட மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் (22) ,மிராஸ் (20) ஆகியோரும் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ,கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து ,விபத்து நடந்த பின்னர் தலைமறைவாகியுள்ள ஆலை உரிமையாளர் அஜித்தை தீவிரமாகத் தேடி வருகிறது.
இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாவித்திரி கோஸின் மகன் மிராஸ் (20) ,சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். விபத்து நடந்த நாளன்று தாயை இழந்த நிலையில் ,தற்போது சிகிச்சை பெற்று வந்த தம்பியும் உயிரிழந்துவிட்டதால் ,எஞ்சியிருக்கும் குடும்பத்தினரும் உறவினர்களும் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்களை தங்களின் சொந்த ஊரான அஸ்ஸாமுக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டும் என்று கோரி ,சாவித்திரியின் மகளும் உறவினர்களும் மருத்துவமனை வாசலில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து சுமார் 30 தொழிலாளர்கள் பட்டாசு தொழிலுக்காக இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் ராஜபாளையம் பகுதியில் மூன்று வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த பட்டாசு நிறுவனங்களில் ஆணும் பெண்ணுமாக வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் அடுத்தடுத்து விபத்தில் பலியானது ,சக வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் மன உளைச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எப்படியாவது இவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்குக் கொண்டு சேர்க்க அரசு உரிய உதவி செய்ய வேண்டும் என காவல்துறையினரிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் உறவினர்கள் கண்ணீ மல்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விபத்துக்குள்ளான ஆலையின் உரிமையாளர் அஜித் தப்பியோடிவிட்டதால் ,கடந்த சில நாட்களாக எந்தவித ஊதியமும் இன்றி ,கையில் பணமில்லாமல் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர் செய்த மனிதாபிமான உதவிகளால்தான் தங்களுக்கு இதுவரை உணவு கிடைத்து வருவதாக தொழிலாளர்களின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே ,மருத்துவமனையில் தொடர்ந்து தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 20 வயதுடைய மற்றொரு வடமாநில இளைஞனுக்கு கூடுதல் மற்றும் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதால் ,அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நிதி உதவி செய்ய வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதியின்றி இயங்கிய கூடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளால் இரண்டு உயிர்கள் பறிபோயுள்ள இச்சம்பவம் ,பட்டாசு உற்பத்திப் பிரிவுகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.








