
விழுப்புரம் , மே 16: விழுப்புரம் நெல் கொள்முதல் போராட்டம் : விழுப்புரம் பெரிய நொளம்பையில் நெல் கொள்முதல் தாமதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் தொடர்பாக விவசாயிகள் கடும் அதிருப்தி வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்மலையனூர் ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய நொளம்பை கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் செய்யாமல் காலதாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பெருமளவில் நெல் சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக பலர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், பெரிய நொளம்பை பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் கொள்முதல் நிலைய வளாகத்திலேயே நீண்ட நாட்களாக தேக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்திய மழையால் அந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் புதியதாக கொண்டு வரப்பட்ட நெல்களை அதிகாரிகள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையால் கடும் மனஉளைச்சலுக்குள்ளான விவசாயிகள் முதலில் கொள்முதல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென சேத்துப்பட்டு – திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Also read : “பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை அச்சத்தில் தள்ளுகிறது” – நெல்லையில் கனிமொழி நெல்லை செய்தியாளர் சந்திப்பு
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த வழியாக சென்ற பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக்கொண்டன. அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானனர். எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், “நெல் விற்பனைக்காக பதிவு செய்து இரண்டு மாதங்களாகியும் அதிகாரிகள் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலையில் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் நேரில் வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நெல் கொள்முதல் பணிகள் விரைவில் சீர்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் வழங்கிய உறுதியை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து மீண்டும் சீரானது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் தாமதம், சேமிப்பு வசதி பற்றாக்குறை, மழையால் நெல் சேதமடைதல் போன்ற பிரச்சினைகள் விவசாயிகளிடையே தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பருவமழை காலங்களில் கொள்முதல் நிலையங்களில் போதிய கிடங்கு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் குவிக்கப்பட்டு சேதமடைவது குறித்து விவசாய சங்கங்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றன.
விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த போராட்டமும் அதே பிரச்சினையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் பாதுகாப்பாக கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக சேமிப்பு மையங்களுக்கு மாற்றப்பட வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
அரசு அதிகாரிகள் அளித்துள்ள உறுதிமொழி எவ்வளவு விரைவில் நடைமுறைக்கு வருகிறது என்பதையே தற்போது அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












