சென்னை ,ஜூன் 5: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா,திமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக,திமுகவின் தோல்வி குறித்தும்,அக்கட்சியின் தலைவர்களது தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார்.
ஆர்.கே. நகரில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா,”தம்பி இளவரசர் உதயநிதி அவர்களே,உங்களுக்கு உங்கள் தந்தை மு.க.ஸ்டாலின் மட்டும் அனுமதி கொடுத்திருந்தால்,இந்தத் தேர்தலில் நீங்கள் 59 தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்கியிருக்க மாட்டீர்கள். வெறும் 108 தொகுதிகளோடு திமுக சுருண்டிருக்காது,அதைவிட மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும். தேர்தல் பிரசாரத்தின்போது,பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு,ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே எங்கள் தலைவர் கொளத்தூர் தொகுதிக்கு வந்தார். அந்த ஒரு மணி நேரப் பிரசாரத்திற்கே நீங்கள் அவுட் ஆகிவிட்டீர்கள். கலைஞரின் வாரிசு,50 வருட அரசியல் அனுபவம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட திமுக தலைமை,எங்கள் தலைவர் வந்து ஐந்து நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் தொகுதியில் தோற்றுப்போனது” என்று குறிப்பிட்டார்.
Also read : ஜூன் 18-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது கூட்டத்தொடர்
மதுரை மாநகராட்சி முறைகேடு முதல் ஹார்ட் டிஸ்க் சர்ச்சை வரை… சி.டி.ஆர். அதிரடி!
இந்தியாவின் முதல் Cool Roof Coating SOP வெளியீடு: தமிழக அரசு புதிய சாதனை
தேர்தல் வெற்றிக்குப் பிந்தைய தவெகவின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர்,”வெற்றி பெற்ற நாங்களோ,பொதுச்செயலாளரோ அல்லது எங்கள் தலைவரோ கடந்த 30 நாட்களாக எந்த இடத்திலும் தலைக்கணத்துடனோ,திமிருடனோ கூட்டம் போட்டுப் பேசவில்லை. அமைதியாக இருக்கிறோம். வெற்றி பெற்ற அடுத்த கணமே நாங்கள் நிர்வாகத்திற்குள் சென்றுவிட்டோம். கடந்த 50 வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளும்,எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்களும் மட்டுமே இங்கு எஞ்சியிருக்கின்றன. அதைச் சரிசெய்யும் பணிகளில் நாங்கள் தீவிரமாக இறங்கியுள்ளோம். ஆனால்,திமுகவினரோ தினமும் கூட்டம் போட்டு,எங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை மிகவும் கேவலமாகப் பேசி வருகிறார்கள்” என்று சாடினார்.
மேலும்,தவெக பெற்ற இந்த வெற்றியானது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா,”இந்த வெற்றியை திமுகவினர் கொச்சைப்படுத்தினால்,அது ஒட்டுமொத்தப் பெண்களையும் கொச்சைப்படுத்துவதற்குச் சமம். இதற்கு உரியப் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. எனவே,நமது பொதுச்செயலாளரிடமும்,தலைவர் அண்ணனிடமும் அனுமதி பெற்று,திமுகவிற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம். நான் இங்கு ஓர் அமைச்சராகப் பேச வரவில்லை,தமிழக வெற்றி கழகத்தின் ஒரு சாதாரணத் தொண்டனாக வந்திருக்கிறேன். தொண்டன் நினைப்பதை வெளிப்படையாகப் பேசும் இடத்தில் நான் இருக்கிறேன்” என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெகவின் வெற்றியை ‘கவர்ச்சி’ என்று விமர்சித்ததற்குப் பதிலளித்த அவர்,”அரசியலில் கவர்ச்சிதான் வேண்டும் என்று நினைத்துதானே உங்களுடைய மகன் உதயநிதியை சினிமாவில் நடிக்க வைத்தீர்கள்? ஆனால் அங்கு என்ன நடந்தது? அவருக்குப் படிப்பும் வரவில்லை,சினிமாவும் வரவில்லை,கடைசியில் அரசியலும் வரவில்லை. பிறப்பால் மட்டுமே ஒரு முதலமைச்சர் உருவாகக் கூடாது,மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றுதான் இந்தத் தேர்தலில் நாங்கள் மக்களிடம் கூறினோம். அதன்படியே,தமிழ்நாட்டுப் பெண்களும் இளைஞர்களும் திரண்டு வந்து இந்த மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்” என்று சாடினார்.
திமுகவின் இந்தத் தோல்வி ஒரு புதிய வரலாறு என்று குறிப்பிட்ட அவர்,”அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம்,கலைஞர் 50 வருடங்களாகக் கட்டிப் பாதுகாத்த இயக்கம் எனப் பெருமை பேசும் திமுகவிற்கு,இதுவரை இல்லாத அளவிலான வரலாற்றுத் தோல்வி இந்த 2026 தேர்தலில் ஏற்பட்டுள்ளது. திமுக இதற்கு முன்பும் பல்வேறு தேர்தல்களில் தோற்றிருக்கலாம். ஆனால்,கலைஞர் தலைவராகவோ,முதலமைச்சராகவோ இருந்தபோது தோற்றதே கிலை கிடையாது. மு.க.ஸ்டாலின் அவர்களே,உங்களுடைய இந்தத் தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை நீங்கள் மீண்டும் ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
தவெகவின் தேர்தல் உத்திகள் மற்றும் இலக்குகள் குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா,”நாங்கள் இந்த வெற்றியை இன்னும் முழுமையாகக் கொண்டாடவில்லை. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும்,மீதமுள்ள தொகுதிகளில் ஏன் தோற்றோம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். தேர்தல் முடிவுகள் வந்த அன்று,இன்னும் 10 தொகுதிகள் நமக்குக் கிடைத்திருக்கக் கூடாதா,நம் அண்ணன் தலைகுனிய வேண்டிய நிலை வந்துவிட்டதே என்று நானும்,பொதுச்செயலாளரும்,ஒட்டுமொத்தத் தொண்டர்களும் அழுதுகொண்டிருந்தோம். அதனால்தான்,அடுத்த நொடியில் இருந்தே எங்களது பணிகளைத் தொடங்கிவிட்டோம். மக்களிடம் இன்னும் நம்பிக்கையை உருவாக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
அரசியல் மற்றும் தேர்தல் வெற்றி என்பது மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் உருவாக்குவதே தவிர,வெறும் கவர்ச்சி அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர்,”இந்தத் தேர்தலில் திமுக தலைவராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் தோற்றார்; திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தோற்றார்; ஒரு சாதாரண இளைஞரிடம் திமுகவின் பொதுச்செயலாளர் தோல்வியடைந்தார். அதேபோல்,திமுக பொருளாளரின் மகனும் தோல்வியைத் தழுவினார். இப்படி திமுகவின் தலைவர்,பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரின் மகன் என அக்கட்சியின் ஒட்டுமொத்த முக்கியப் புள்ளிகளும் தோல்வியுற்ற ஒரே தேர்தல் இந்த 2026 தேர்தல் மட்டுமே. இதனைச் சாத்தியப்படுத்திக் காட்டியவர் எங்களது தலைவர் திரு. ஸ்ரீ ஜோசப் விஜய் அவர்கள்” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.








