சின்னத்திரை நடிகர் தினேஷ் : மின்வாரிய வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

சின்னத்திரை நடிகர் தினேஷ் latest news _ breaking news _ Criminal Case

நெல்லை, நவம்பர் 13, 2025 – மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தைத் திரும்பக் கேட்டபோது கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சின்னத்திரை நடிகர் தினேஷ் மீது நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நடிகர் தினேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் | 6000 மூட்டைகளில் நெல் முளைப்பு | குன்னத்தூர், வெள்ளக்கோவில் விவசாயிகள் அதிருப்தி |

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (47). இவர் சென்னை திரைப்படத் துறையில் கேண்டீன் சப்ளையராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளங்களில் பணியாற்றியபோது, இவருக்குச் சின்னத்திரை நடிகர் தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில், பட்டதாரியான தனது மனைவிக்கு அரசு வேலை தேடி வந்துள்ளார் கருணாநிதி. இதனையறிந்த நடிகர் தினேஷ், தனக்கு அரசு உயர் மட்டங்களில் உள்ள தொடர்புகள் மூலம் மின்வாரியத்தில் (TNEB) எளிதாக வேலை வாங்கித் தர முடியும் என்று உறுதியளித்துள்ளார். இதற்கு மொத்தம் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும், முதற்கட்டமாக முன்பணமாக 3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் தினேஷ் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரது வார்த்தைகளை முழுமையாக நம்பிய கருணாநிதி, கடந்த 2022-ஆம் ஆண்டே முதற்கட்ட தொகையான ரூ.3 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.

ஆனால், பணம் கொடுத்துப் பல மாதங்கள் கடந்தும் கருணாநிதியின் மனைவிக்குக் கூறியபடி வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து தினேஷிடம் கருணாநிதி பலமுறை நேரில் வினவியபோதும், அவரிடமிருந்து முறையான பதில்கள் ஏதும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. கால தாமதத்தால் சந்தேகமடைந்த கருணாநிதி, தான் கொடுத்த 3 லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாகத் திருப்பித் தருமாறு தினேஷை வற்புறுத்தத் தொடங்கியுள்ளார்.

இப்பணப் பிரச்சினை தொடர்பாக, கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி வள்ளியூர் பகுதியில் இருவருக்கும் இடையே சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்போது நடிகர் தினேஷ் தனது ஆதரவாளர்கள் சிலருடன் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைத் திரும்பக் கோரி கருணாநிதி வாக்குவாதத்தில் ஈடுபடவே, இரு தரப்புக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடிகர் தினேஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் சேர்ந்து கருணாநிதியைக் கம்பால் தாக்கியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த கருணாநிதிக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிப்புக்குள்ளான கருணாநிதி இச்சம்பவம் குறித்துப் பணகுடி காவல் நிலையத்தில் விரிவான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், மோசடி மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக, நெல்லைக்கு வரவழைக்கப்பட்ட நடிகர் தினேஷ், பணகுடி காவல் நிலையத்தில் வைத்து போலீசாரால் தனிப்படை விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், முதற்கட்டமாக இருதரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இருவருக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் பணப் பரிமாற்றத்திற்கான வங்கி ஆதாரங்கள், சாட்சிகள் மற்றும் சம்பவ இடத்தின் பின்னணி ஆகியவை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே சட்டப்பூர்வமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்..

news desk
news desk
Articles: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »