திருநெல்வேலி, ஜூன் 4: திருநெல்வேலி சந்திப்பு அருகே மது போதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இந்தச் சம்பவத்தில் கொலையுண்ட நபரின் மனைவி மற்றும் மாமனாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, உயிரிழந்தவரின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (43).நிதி நிறுவனம் (பைனான்ஸ்) நடத்தி வந்த இவருக்கு, கல்யாணி சுந்தரி என்ற மனைவியும், மகாராஜன் என்ற மனோ (19) என்ற மகனும் உள்ளனர்.மாயாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் அவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம்போல், புதன்கிழமை நள்ளிரவில் மாயாண்டி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.போதை தலைக்கேறிய நிலையில், அவர் தனது மகன் மகாராஜனிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்துள்ளார்.நள்ளிரவைத் தாண்டியும் இந்தத் தகராறு நீடித்ததாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன், வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து தந்தை மாயாண்டியை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
ALso read : “NEET ரத்து : MP மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி மறுபடி தேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை!”
தலையிலும் உடலின் முக்கியப் பகுதிகளிலும் பலத்த காயம் அடைந்த மாயாண்டி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய போலீசார், அதிகாலையிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.உயிரிழந்த மாயாண்டியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இக்கொலைச் சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோட முயன்ற மகன் மகாராஜனை உடனடியாகக் கைது செய்தனர்.அவரிடம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி பறிமுதல் செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்தத் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, உயிரிழந்த மாயாண்டியின் தந்தை மாரியப்பன் வியாழக்கிழமை காலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில், தனது மகன் மாயாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி கல்யாணி சுந்தரி, மாமனார் உள்ளிட்டோருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனவே, இந்த வழக்கில் அவர்கள் இருவரையும் குற்றவாளிகளாகச் சேர்த்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பத் தகராறில் பெற்ற தந்தையையே மகன் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவமும், அதனைத் தொடர்ந்து மருமகள் மீது மாமனார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த விவகாரமும் நெல்லை மீனாட்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்புகார் குறித்தும் போலீசார் தங்களது விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர் .








