தேனி அருகே பேக்கரியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட வடமாநில ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி , மே 12: தேனி மாவட்டத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் வாங்கியதற்கான பணத்தை கேட்டதற்காக, பேக்கரியில் வேலை பார்த்த வடமாநில ஊழியரை குடிபோதையில் இருந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.
தேனி அருகே உள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் டீக்கடை மற்றும் பேக்கரி இணைந்து செயல்பட்டு வரும் கடை ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் வேலை பார்த்து வந்தார்கள் . தினசரி வியாபாரம் நடைபெறும் இந்த கடையில் நேற்று இரவு ஏற்பட்ட வன்முறை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போலீசார் மற்றும் அப்பகுதி மக்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் குடிபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அந்த பேக்கரிக்கு வந்துள்ளனர். அவர்கள் சிகரெட் வாங்கிய பின்னர் அதற்கான பணத்தை வழங்காமல் செல்ல முயன்றார்கள் . அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் சிகரெட்டுக்கான தொகையை கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், “எங்கள் பகுதியில் கடை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு எங்களிடமே காசு கேட்கிறீர்களா?” என்று தகராறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குவாதம் சில நிமிடங்களில் வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது. போதை நிலையில் இருந்த இளைஞர்கள் உருட்டுக்கட்டையால் டீக்கடை மாஸ்டரை தாக்கியதோடு, கடையில் இருந்த சேர்கள் மற்றும் பொருட்களை எடுத்து அங்கிருந்த ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
திடீரென நடந்த தாக்குதலால் கடைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் அச்சத்தில் அலறியடித்துள்ளனர். தாக்குதலில் கடையின் சில பொருட்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தை பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை தேடியுள்ளனர். ஆனால் போலீசார் வரும் முன்பே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
CCTV காட்சிகள் மூலம் சிக்கிய இளைஞர்கள்
தாக்குதல் நடைபெற்ற பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களில் முழு சம்பவமும் பதிவாகியுள்ளது. அதனை கைப்பற்றிய காவல்துறையினர், வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரையும் அடையாளம் கண்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கருவேலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சம்பவ நேரத்தில் குடிபோதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கானாவிளக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த வடமாநில ஊழியர் அரவிந்த் என்பவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தாக்குதலால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்த தொழிலாளி மீது நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் CCTV வீடியோவில் இளைஞர்கள் கடைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
சிகரெட்டுக்கான பணம் கேட்டதற்காக இப்படியான தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேலைக்காக வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது.







