சென்னை , ஏப்ரல் 21 : தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அண்டை மாநிலமான கேரளாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை வழங்க அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நேரடி வழிகாட்டுதலின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 135B-இன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களுக்குச் சென்று தங்கியிருக்கும் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாமல் போகும் சூழலை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் இந்த முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வேலை செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த தற்காலிகப் பணியாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் என அனைவருக்கும் இந்தச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை விதிமுறை முழுமையாகப் பொருந்தும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also : பாசிச சக்திகளுக்கு தலைகுனிய மாட்டேன்: இறுதி நாளில் விஜய் அதிரடி முழக்கம்!
நெல்லை தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் பிரம்மாண்ட இறுதிப் பிரச்சாரம்
இந்தத் தேர்தல் ஆணைய உத்தரவின் மிக முக்கிய அம்சமாக எந்தவொரு நிறுவனமும் விடுமுறை அளிப்பதைக் காரணம் காட்டி ஊழியர்களின் அன்றைய நாளுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ அல்லது பிடித்தம் செய்யவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்பூர்வ உத்தரவை மீறி ஊழியர்களுக்கு விடுப்பு மறுக்கும் அல்லது சம்பளப் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்டப்படியான அபராதம் விதிக்கப்படுவதோடு உரிய நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதனைத் தீவிரமாகக் கண்காணிப்பதற்கெனத் தனிப் படைகள் அமைக்கப்பட்டு எல்லைப் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் கண்காணிக்கப்பட உள்ளன.
ஏற்கனவே வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வணிக வங்கிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அண்டை மாநில வாழ் தமிழர்களுக்கும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த வாக்குச் சதவீதத்தை கணிசமாக உயர்த்த முடியும் என்று தேர்தல் ஆணையம் வலுவாக நம்புகிறது.







