நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் பரபரப்பு: பெண் பயணியின் கழுத்தை இறுக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு.. பெண் உட்பட 2 பேர் கைது

image 483

Nellai,May 23:நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில், பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை துண்டால் இறுக்கி, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது சிறுவனையும் பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை அடுத்த தச்சநல்லூர், கரையிருப்பு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (36). வணிகவியல் பட்டதாரியான இவர், நேற்று நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலில் புறப்பட்டுள்ளார். குரும்பூர் அருகே நாலுமாவடியில் உள்ள ஆன்மீக மையத்திற்குச் செல்வதற்காக, பெண்கள் பயணிக்கும் பொதுப் பெட்டியில் அவர் அமர்ந்திருந்தார்.

ரயில் புறப்பட்டபோது, அதே பெட்டியில் ஓர் இளம் பெண்ணும், 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் வந்து அமர்ந்துள்ளனர். ஆரம்பத்தில் இயல்பாகவே இருந்த அந்தப் பெண்ணின் நடவடிகைகளில், ரயில் கச்சனாவிளை ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும்போது திடீர் மாற்றம் தெரிந்தது. பெட்டியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், திடீரென தமிழ்ச்செல்வியின் கழுத்தில் துண்டைப் போட்டுப் பின்புறமாக இறுக்கியுள்ளார்.

image 484
கைது செய்யப்பட்டுள்ள நித்யா

திடீர் தாக்குதலால் தமிழ்ச்செல்வி நிலைகுலைந்த சூழலில், அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அந்தப் பெண் பறித்துள்ளார். தமிழ்ச்செல்வி சத்தம் போட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவருடன் இருந்த சிறுவன் ஒரு வெள்ளைத் துணியால் தமிழ்ச்செல்வியின் வாயை அமுக்கிப் பிடித்துள்ளான்.

இதற்கிடையே ரயில் குரும்பூர் நிலையத்தை நெருங்கி வேகம் குறையத் தொடங்கியதும், சங்கிலியைப் பறித்த பெண்ணும் சிறுவனும் ரயிலில் இருந்து கீழே குதித்துத் தப்பியோட முயன்றனர். அதிர்ச்சியிலிருந்து மீண்ட தமிழ்ச்செல்வி சத்தமிட்டுக் கூச்சலிடவே, சக பயணிகள் உடனடியாகச் செயல்பட்டனர்.

ரயிலில் இருந்து இறங்கி ஓடிய இருவரையும் பயணிகள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் குரும்பூர் ரயில் நிலையத்திலேயே நெல்லை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

also read : தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்: காயமடைந்த யானைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய் யானையுடன் சேர்த்த வனத்துறை

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட பெண் தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கொட்டாக்குறிச்சி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த நித்யா (35) என்பதும், அவருடன் இருந்தது 14 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, நித்யா மற்றும் சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்கச் சங்கிலியும் பத்திரமாக மீட்கப்பட்டது.

பகலில் ஓடும் பயணிகள் ரயிலில், அதுவும் பெண்கள் பெட்டியில் சக பெண் பயணி ஒருவரே கழுத்தை இறுக்கி நகையைப் பறித்த இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »