நெல்லை ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அரசு மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற வழக்கில் இரண்டு இளைஞர்களைக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லோடு வேன் மற்றும் 2,450 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் மீனவர்களுக்கான மானிய விலைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை கூடங்குளம் அருகே உள்ள தாமஸ் மண்டபம் கடலோரப் பாதுகாப்பு குழுமச் சோதனைச் சாவடியில் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மேற்பார்வையில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் வில்சன் தலைமையிலான போலீஸ் குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர். அப்போது அந்தச் சோதனைச் சாவடி வழியாக வந்த ஒரு மினி லோடு வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தின் பின்புறம் சந்தேகத்திற்கிடமான வகையில் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் சோதித்தபோது மீனவப் பயன்பாட்டிற்காக அரசு வழங்கும் வெள்ளை நிற மானிய மண்எண்ணெய் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 70 பிளாஸ்டிக் கேன்களில் மொத்தம் 2,450 லிட்டர் மண்எண்ணெய் சட்டவிரோதமாக நிரப்பப்பட்டு கேரளாவுக்குக் கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு கிராமம் சி.எஸ்.ஐ சர்ச் தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் ஜெரால்டு (23) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு நடுத்தெருவைச் சேர்ந்த மனோகர் மகன் முத்துக்குமார் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து மரைன் போலீஸார் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லோடு வாகனத்தையும் 2,450 லிட்டர் மண்எண்ணெயையும் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெரால்டு மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய் மற்றும் வாகனத்திலிருந்தும் அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகக் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாரிடம் (Civil Supplies CID) மரைன் போலீஸார் முறைப்படி ஒப்படைத்தனர். இந்த மண்எண்ணெய் எந்தப் பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.








